அதிமுகவுக்கு மாற்றாக உருவான தினகரன்.. ஸ்டாலின் செய்ய தவறியது இதுதான்!
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக வாக்குகள் இரண்டாக பிரியும் என நினைத்திருந்தபோதிலும், திமுகவால் 3வது இடத்திற்கே வர முடிந்தது.
கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா அரசுக்கு எதிராக தீவிர எதிர்ப்பலை இருந்தபோதிலும், அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது.
இதற்கு முன்பாக நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் திமுக ஒரு சீட்டை கூட வெல்ல முடியவில்லை. ஆனால் பாஜக கன்னியாகுமரியிலும், பாமக தருமபுரியிலும் வெற்றி பெற்று திமுகவுக்கு கூடுதல் ஷாக்.
தகராறுகள் நடுவே அதிமுக
இது பரவாயில்லை. அப்போதாவது ஜெயலலிதா என்ற ஆளுமை திமுக தோல்விக்கு காரணமாக இருந்தது. ஆனால் இப்போது அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் என பிரிந்து பிறகு சேர்ந்து, தினகரன் தரப்பு ஒருபக்கம் தனி ஆவர்த்தனம் பாடி.. சொல்லும்போதே மூச்சு முச்சு முட்டும் இத்தனை தகராறுகளுக்கு நடுவே நடந்த ஒரு இடைத் தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு போயுள்ளது.
கருணாநிதி மாஜிக்
செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் இன்னும் கொஞ்சம் எழுச்சியை எதிர்பார்க்கிறார்கள் திமுகவினர். இதில் கருணாநிதி செய்த ஒரு மாஜிக்கை ஸ்டாலின் செய்ய தவறி வருகிறார். ஆனால் அதை தினகரன் சரியாக செய்கிறார் என்பதில் ஒளிந்துள்ளது தினகரனை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான காரணம்.
ஏன் திமுக மாற்றாக இல்லை?
அதிமுகவுக்கு மாற்றாக அதே அதிமுகவிலிருந்து வந்த சுயேச்சை தினகரனை தேர்ந்தெடுத்த மக்கள் ஏன் நீண்ட கால போட்டியாளரான திமுகவை மாற்றாக ஏற்கவில்லை? இதற்கு கருணாநிதி ஸ்டைல் அரசியலை இப்போது ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை என்பது முக்கிய காரணம். கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எப்போதுமே செய்திகளின் நாயகனாக அவர்தான் இருப்பார். தன்னை சுற்றியே தமிழக அரசியல் சுழல காரணமாக இருப்பார்.
ஜெயலலிதா பதில்
செய்தியாளர்களுக்கு கூட பேட்டியளிக்காமல் பதுங்கும் ஜெயலலிதா கூட, கருணாநிதியின் அறிக்கைகளுக்கு பதில் சொல்லாமல் விட்டதில்லை. அவ்வாறு ஜெயலலிதா பதில் சொல்லாத தருணங்கள், அதிமுகவுக்கு பின்னடைவாகவே அமைந்துள்ளது. ஏனெனில் கருணாநிதி தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் பாமர மக்களுடன் தொடர்புடையது. அது தொடர்பான பல்வேறு ஆதாரங்களை திரட்டி, அறிக்கையாக வெளியிட்டு கலங்கடிப்பார்.
பதிலளிக்கும் திறமை
ஒரு சாரார் விமர்சனம் செய்வார்கள் என்று தெரிந்தாலும் அதை கூட அச்சமின்றி செய்வார் கருணாநிதி. பூடகமாக பேசுவது, இரட்டை பொருள்படும்படி பேசுவது என அவரது ஸ்டைல் அரசியல் லாவகமாக இருக்கும். மேலும், அவர் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறமை நீண்டகாலமாகவே புகழப்படும் ஒன்று. ஞாபக சக்தியும் அபாரமானது.
ஸ்டாலின் மீது எதிர்பார்ப்பு
அதேநேரம், ஸ்டாலின் இந்த விஷயங்களில் கருணாநிதி போன்ற கூர்மையோடு செயல்படவில்லை என்ற ஆதங்கம் அரசியல் விமர்சகர்களுக்கு உள்ளது. சட்டசபையில் நடைபெற்ற சட்டை கிழிப்புக்கு பிறகு ஸ்டாலின் செய்திகளில் பெரிதாக பேசப்படும் சூழல் உருவாகவில்லை.
செய்திகளில் எப்போதும் தினகரன்
அதேநேரம், தினகரன் கருணாநிதி ஸ்டைல் அரசியலைத்தான் செய்து வருகிறார். கடந்த ஓராண்டாகவே தினகரனை சுற்றியேதான் செய்திகள் வலம் வருகின்றன. அவர் செய்தியாளர்களை எதிர்கொள்ளும் விதமும் பல தரப்பாலும் தொடர்ச்சியாக புகழப்படுகிறது. லைம் லைட் வாய்ப்பு இருந்தும் ஸ்டாலின் அதை பயன்படுத்தவில்லை. ஆனால் புதிதாக அந்த லைம் லைட் ஒளிவட்டத்தை தன்னை சுற்றி உருவாக்கிவிட்டார் தினகரன். இதுதான் மக்கள் அதிமுகவுக்கு மாற்றாக தினகரனை தேர்ந்தெடுக்க காரணம்.