கோவை தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி!
கோவை தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று இளைஞர்கள் விஷவாயு தாக்கி பலியாகி உள்ளனர்.
கோவை : கோவை அருகே தங்கநகை தொழிற்சாலை ஒன்றில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு இருந்த மூன்று ஊழியர்கள் விஷவாயு தாக்கி பலியாகி உள்ளனர்.
கோவை அருகே ஆர்.எஸ்.புரத்தில் இயங்கி வருகிறது 'ஸ்ரீ பத்மராஜா ஜூவல்லரி' இதன் உரிமையாளர் ரவிசங்கர். இந்த தொழிற்சாலையில் தங்கத்தை சுத்தம் செய்ய பல வகையான வேதியியல் பொருட்கள் பயன்படுத்தப்படும்.
அப்படி பயன்படுத்தும்போது தங்க துகள்களும் அந்த வேதியியல் பொருட்களுடன் வெளியேறும், அவை அங்கு உள்ள பெரிய தொட்டிக்கு செல்லும். 6 மாதத்திற்கு ஒரு முறை அந்த தொட்டியை சுத்தம் செய்து அதில் உள்ள தங்க துகள்களை பிரித்து எடுப்பது வழக்கம்.
அதன்படி நேற்று நள்ளிரவு தொட்டியை சுத்தம் செய்து தங்க துகள்களை எடுப்பதற்காக தொழிற்சாலையை சேர்ந்த கவுரிசங்கர், ஏழுமலை, ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று ஊழியர்கள் தொட்டிக்குள் இறங்கினர். அதற்கு முன்னதாகவே தொட்டிக்குள் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி உள்ளனர்.
உள்ளே இறங்கியதும் திடீரென கவுரிசங்கர், ஏழுமலை ஆகிய இருவரையும் விஷவாயு தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் மூச்சுத்திணறி மயக்கமடைந்தனர். வெகுநேரம் ஆகியும் இருவரும் வெளியே வராததால், வெளியே நின்று இருந்த ராதாகிருஷ்ணன் கூச்சல் போட்டு உள்ளார்.
உடனே தொழிற்சாலையின் காவலாளி சூர்யாவும் உடனடியாக தொட்டிக்குள் இறங்கினார். அவரையும் விஷவாயு தாக்கியது. தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தொட்டிக்குள் இருந்த மூன்று பேரையும் மீட்டனர். அதில் இருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து இருப்பதும், சூர்யா மயக்கமான நிலையிலும் இருப்பது தெரியவந்துள்ளது.
அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அவரும் இன்று காலை 4.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இறந்து போன மூன்று பேரும் 28 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும், கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கும் போதும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த வேண்டும் என்று அரசு பலமுறை அறிவுறுத்தி இருந்தும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இறங்கியதாலேயே விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.