வானில் விமானம்.. பயங்கர வெடிச் சத்தம்.. இரவெல்லாம் தூங்காமல் தவிக்கும் கரூர் மாவட்ட மக்கள்!
கரூர்: கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இடி இடிப்பதுப் போல் பலத்த வெடிச்சத்தம் சத்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மர்ம சப்தம் குறிப்பாக ஈசநத்தம், பண்ணப்பட்டி, எருமார்பட்டி, அஞ்சகவுண்டன்பட்டி உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் கேட்டுள்ளது. இதனால் பல வீடுகளில் அதிர்வுகளும் ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறினர்.

இதே போன்ற சப்தம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் நான்கு முறை கேட்டுள்ளதாம். அந்த சமயத்தில், வானில் விமானம் பறந்ததாகவும் அதன் பிறகே இந்த வெடிச்சத்தம் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அடிக்கடி கேட்கும் வெடி சப்தத்தினால் இப்பகுதி மக்கள் இரவு தூக்கத்தை தொலைத்து நிற்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்திக்கு தகவல் தெரிவிக்க அவர் இது குறித்து விசாரித்து மக்கள் அச்சம் போக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உளவு விமானம் காரணமா?
இங்கிலாந்திலும் இதுபோல சில மாதங்களுக்கு முன்பு பலத்த சப்தம் வானில் கேட்டது. அந்த சத்தத்திற்கு அமெரிக்காவின் ரகசிய உளவு விமானமாக கருதப்படும் அரோராவே காரணம் என்றும் கூறப்படுகிறது. அதே விமானம் கரூருக்கு மேலே பறந்ததா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
காரணம் இந்த அரோரா விமானம் மிக பயங்கரமான சத்தத்தை எழுப்பக் கூடியது. காரணம் இதன் படு வேகம். எனவே இங்கிலாந்தை பயமுறுத்திய அதே அரோரா தற்போது இந்தியா பக்கமாகவும் பறந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications