ஜெயலலிதா மாரடைப்பு முதல் அப்பல்லோ அறிக்கை வரை.. பரபரப்பான நிமிடங்கள்!
முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை வளாகம் பரபரப்படைந்துள்ளது.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து இன்று வரை 74 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். முதல் மருத்துவ அறிக்கையில் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளியான அறிக்கைகளில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி அறிக்கை வெளியானது.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு நுரையீரலில் நோய் தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, அளித்த பேட்டியில், முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருவதாகவும், வீடு திரும்புவது பற்றி முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறி வந்தார். இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவனை வளாகம் இன்று மாலை முதலே பரபரப்படைந்தது. அந்த பரபரப்பான நிமிடங்கள்.
மாலை 4.30 மணி : அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டாவது வளாகம் பரபரப்படைந்தது
மாலை 5 மணி: முதல்வர் ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் பரவியது
மாலை 5.30 மணி : சென்னையில் இருந்த மூத்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் அப்பல்லோவிற்கு விரைந்தனர்.
மாலை 6 மணி : அப்பல்லோ மருத்துவமனை முன்பு அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. ராகுகால பூஜை துர்க்கைக்கு செய்ய சொல்லி அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இரவு 7 மணி: தமிழக காவல்நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு அப்பல்லோவில் இருந்து உத்தரவு பறந்தது
இரவு 8 மணி : அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ நோக்கி வரத் தொடங்கினர்
இரவு 9.15 மணி: அப்பல்லோ அறிக்கை வெளியானது. முதல்வர் ஜெயலலிதாவிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிக்கை தெரிவித்தது.
இரவு 9.30 மணி : மும்பையில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது
இரவு 9.45 மணி அப்பல்லோவில் நடப்பது பற்றி உள்துறை அமைச்சா ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்
இரவு 10 மணி : அப்பல்லோவில் அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் அவசர கூட்டம் நடத்தினர்.
இரவு 10.15 மணி : அதிமுக தொண்டர்கள் கூட்டம் அதிகரிக்கவே, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி சென்னையில் நடக்கும் நிலவரம் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியானது.