சந்திரகிரகணம் : திருப்பதி, திருச்செந்தூரில் சாமி தரிசனம் நேரம் மாற்றம்
இன்று சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 மணிநேரம் நடை அடைக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருமலை ஏழுமலையான், திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி ஆலயங்களில் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இன்று மாலை நான்கரை மணியிலிருந்து 8 ஆம் தேதி காலை 2 மணி வரை கோயில் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வழக்கமான வழிபாடுகள் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சேவைகள் ரத்து
சந்திரகிரகணத்தை முன்னிட்டு 10 மணி நேரம் நடை அடைக்கப்படுவதால் 7 ஆம் தேதி வழக்கமாக நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கூட்ட நெரிசல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். எனவே அதை சரிசெய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளியே வரும் பாதை
தரிசனம் செய்து வெளியே வரும் இடத்தில் உள்ள வெள்ளி கதவு வாசலின் வலது திசையில் 15 முதல் 20 அடி உயரத்திற்கு இரும்பு படி அமைத்து பிரசாதங்கள் வழங்கும் இடம் அருகே பக்தர்கள் வெளியே வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் இந்தப் படி வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
திருச்செந்தூரில் தரிசன நேரம் மாற்றம்
சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கட்கிழமை, நடைதிறப்பு மற்றும் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இரவு 10.50 மணி முதல் நள்ளிரவு 12.44 மணி வரை சந்திரகிரகணம் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து நடக்கும் மற்ற பூஜைகள் வழக்கமான நேரப்படி நடக்கும்.
கோவிலில் பூஜைகள்
பின்னர், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்பாடு மற்றும் ராக்கால அபிசேகமும் நடைபெறுகின்றன. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கமான நேரத்தில் நடைபெறும். இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜை முடிந்ததும் நடை சாற்றப்படுகிறது. மீண்டும், இரவு 9 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறுகிறது. அதன் பின் சுவாமி மீது பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டு நடைதிருக்காப்பு இடப்படுகிறது.