திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலம் : பக்தர்கள் குவிந்தனர்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா இன்று தொடங்கியுள்ளது. நாளை ஆடி பரணியும், 28ம் தேதி ஆடிக்கிருத்திகை விழா, தெப்பத்திருவிழாவும் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் 5ம் படைவீடாக திகழும் திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி முதலான விழாக்கள் சிறப்பாக நடைபெறும். இங்கு ஆடிக்கிருத்திகை விழா அமர்க்களமாக நடைபெறுவது வழக்கம்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாது புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.
ஆடிக்கிருத்திகை தொடக்கம்
ஆடிக்கிருத்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை ஆடி அஸ்வினியுடன் தொடங்கியுள்ளது. 27ம் தேதி ஆடி பரணியும், 28ம் தேதி ஆடிக்கிருத்திகை, முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகின்றன. இந்த விழாவில், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளது தமிழக அரசு.
பக்தர்கள் வருகை
பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மலர்க்காவடி, மயில் காவடி உள்பட பல்வேறு காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.இந்த விழாவுக்கு வருகை தருவதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் திருவள்ளூர் மற்றும் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன.
பக்தர்களுக்கு ஏற்பாடு
மலையடிவாரப் பகுதியில், காவடிகள் வருவதற்கும் பக்தர்கள் பால் குடம் எடுத்து வருவதற்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. முடிகாணிக்கை செலுத்துவதற்கு வரும் பக்தர்களுக்கு, இரண்டு மூன்று இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தெப்பத்திருவிழா
ஆடிக்கிருத்திகை மற்றும் அதையொட்டி நடைபெறும் தெப்பத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறையினரும் பூஜை ஏற்பாடுகளை சிவாச்சார்யர்களும் செய்து வருகின்றனர். 28ம் தேதியன்று முதல்நாள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. பக்தர்கள் இன்று முதலே குவியத் தொடங்கியுள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்
29ம் தேதியன்று இரண்டாம் நாள் தெப்ப நிகழ்ச்சியும், 30ம் தேதியன்று மூன்றாம் நாள் தெப்ப நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு 30ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் 28ம் தேதி இரவு 12 மணி வரை அனைத்து வித லாரிகள், கன்டெய்னெர் லாரிகள் திருத்தணி நகருக்குள் நுழைய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.