ராஜ்யசபா தேர்தல்- சிபிஎம் வேட்பாளராக டி.கே.ரங்கராஜன் அறிவிப்பு- மீண்டும் போட்டியிடுகிறார்
தற்போது பதவியில் உள்ள இவரது பதவிக்காலம் முடிவடைகின்ற நிலையில் மீண்டும் அவரையே வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட 6 பேரின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி அதற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 4 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
5வது இடத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவின் ஆதரவைக் கோரியிருந்தது. அதை ஏற்று ஆதரிப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும் மொத்தமாக 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5வது இடத்திற்கு டி.கே.ரங்கராஜனே போட்டியிடுகிறார். இதைக் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தங்களது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியைத் தொடர விரும்புவதாகவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
கடந்த ராஜ்யசபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. இதையடுத்து தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.