காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை : ராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியிடம் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுக்காற்றுக் குழுவையும் உடனடியாக அமைக்கக்கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடக்கும் ராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த மோடியை எதிர்த்து அரசியல் கட்சிகள் சார்பில் கறுப்புக்கொடி போராட்டம் நடந்தது.
இருப்பினும் திட்டமிட்டபடி, சென்னை வந்த பிரதமர் திருவிடந்தையில் நடக்கும் ராணுவ கண்காட்சியை திட்டமிட்டபடி துவக்கி வைத்தார். அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, அங்கிருந்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைரவிழா நிகழ்வில் கலந்துகொண்டார்.
அடையாறு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்த மோடி, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லிக்கு புறப்பட்ட மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்.
அந்த கோரிக்கை மனுவில், அடுத்த பருவகாலம் ஜூன் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளதால் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
மேலும், காவிரி ஒழுங்காற்று குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார்.