காவிரி: கெடு முடிந்த பின்னரும்... அதிமுக அரசு வலுவான எதிர்ப்பைக் காட்டாமல் இருக்கிறதே!
உச்சநீதிமன்றம் கெடு முடிந்த பின்னரும் கூட மத்திய அரசுக்கு அதிமுக அரசு வலுவான எதிர்ப்பை காட்டாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசு குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றுதான் சொல்கிறது.. அது என்ன மாதிரியான முறையீடு? என்பதைக் கூட அழுத்தம் திருத்தமாக தமிழக அரசு வெளிப்படையாக பேச தயங்குவது போராடும் பொதுமக்களிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
6 வார கெடுவிதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொன்னது மத்திய அரசு. உடனேயே தமிழக அரசு போதிய அழுத்தம் தரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
தமிழக அரசு தரப்பிலோ, 29-ந் தேதி வரை பொறுத்திருப்போம்; அதிமுக எம்பிக்கள் போராடுகிறார்கள் என்று திரும்ப திரும்ப சலித்துப் போகும் விளக்கம் தரப்பட்டது. கெடுமுடிவடைந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
தற்போது அதிமுகவும் ஏப்ரல் 2-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் என அடையாளத்துக்கு அறிவித்துள்ளது. புதுச்சேரி காங்கிரஸ் அரசோ, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என அறிவித்திருக்கிறது.
அதேநேரத்தில் தமிழக அரசு தரப்பிலோ, உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று மட்டும் விளக்கம் தரப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு வழக்கா? என மதுரையில் முதல்வர் எடப்பாடியாரிடம் கேட்டால், சட்ட வல்லுநர்கள் முடிவு செய்வார்கள் என சொல்லிவிட்டு பிரஸ் மீட்டையே முடித்துவிடுகிறார்.
ஆயிரமாயிரமாண்டு கால காவிரி உரிமை காவு கொள்ளப்படும் இந்த சூழலிலும் கூட மத்திய அரசுக்கு எதிராக முணுமுணுத்தலை மட்டுமே சன்னமான குரலில் காட்டுகிறது தமிழக அரசு. இது வேதனையில் வாடும் தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.