பிளஸ் 1க்கும் பொதுத்தேர்வு... பிளஸ் டூ மதிப்பெண்களும் குறைப்பு- அரசாணை வெளியிட்டது அரசு!
போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் நடப்பு ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்லிம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பிளஸ் டூ மதிப்பெண்களும் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது " மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் பிளஸ் 1 வகுப்புக்கும் நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும். 10, 11 மற்றும் 12 என 3 ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்பதால் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மதிப்பெண்கள் +1 மற்றும் +2விற்கு தலா 600 மதிப்பெண்கள் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக புதிய பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும். ஒவ்வொரு பாடத்திலும் 10 சதவீதம் அகமதிப்பீடு அளிக்கப்படும். இதே போன்று பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2.30 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்றார் செங்கோட்டையன்.
ஒரு வேளை பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால் இதனால் பனிரெண்டாம் வகுப்பு செல்வதில் எந்தத் தடையும் இல்லை, தோல்வியுற்ற மாணவர்கள் ஜூன், ஜூலை மாதத்தில் நடைபெறும் தேர்வில் தோல்வியுற்ற பாடத்தை தேர்வெழுதலாம் என்றும் அதற்கான அம்சமும் அரசாணையில் இடம் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மாணவர்களின் மனச்சோர்வை போக்க மாலை நேரங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் சனிக்கிழமைகளில் 3 மணி நேரம் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படும் என்றார்.