வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரங்களை இலவசமாக வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
திருச்சி: கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கியும் அழுகியும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, 1 மூட்டை பொட்டாஷ் 15 கிலோ சல்பேட் போன்ற உரங்களை விவசாயிகளுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி அருகே உள்ள வயலூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும் தொட்டக்கலை பயிர்களான உளுந்து, ஆமணக்கு., பயறு வகைகள் போன்றவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.
மழை காலங்களில் டெல்டா மாவட்டங்களில் வீணாகும் சுமார் 5 லட்சம் கனஅடி தண்ணீரை காவிரி மற்றும் கொள்ளிடத்தில் தலா 10 தடுப்பு அணைகள் கட்டி சேமிக்கவும், அவற்றை மாவட்டங்களுக்கு அனுப்பும் வகையில் ரூ. 250 கோடியில் அறிமுகப்படுத்தியுள்ள வைகை குண்டாறு திட்டத்தை விரைவில் அணுமதிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை வெள்ளத்தில் மூழ்கியும் அழுகியும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, 1 மூட்டை பொட்டாஷ் 15 கிலோ சல்பேட் போன்ற உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
வட மாநிலங்களைப் போல அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் தமிழகத்தில் உள்ள வீராணம் போன்ற மிகப்பெரிய ஏரிகளின் கரைகளை வலுப்படுத்த வேண்டும் என்றார்.