+12, 10-ம் வகுப்பு ரிசல்ட்டில் ரேங்க் முறையை ஒழித்தது நல்லதே...கல்வியாளர்கள் வரவேற்பு
பிளஸ் 2, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ரேங்க் முறை ஒழிக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவித்துள்ளது. இது மாணவர்களின் நலனுக்கானது என்று தமிழகக் கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
சென்னை: ப்ளஸ் டூ தேர்வு முடிவில் இனி முதல் 3 ரேங்க் அறிவிக்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளதை கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அளித்துள்ள பேட்டியில்:
சக மாணவனைப் போட்டியாளனாகக் கருதும் மனப்போக்கை மாற்றிவிடும் அறிவிப்பு இது. மிகுந்த வரவேற்புக்கு உரியது.
25 ஆண்டு போராட்டம்
கடந்த 25 ஆண்டுகளாக நாங்கள் போராடிவருகிறோம் ரேங்க் முறை வேண்டாம் என்று. அது இப்போதுதான் அரசின் காதை எட்டியுள்ளது.
மன உளைச்சல் இல்லை
ஆனாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான். மாணவர்களை நல்ல, சிறந்த குடிமகன்களாக உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும். போட்டியாளர்களாக மாணவர்கள் இருந்தால் அவர்கள் மிகுந்த மன உளைச்சல் ஏற்படும்.
கவலை இல்லை
அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவுகள் வெளியிடும்போது மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஒரு மார்க்கில் முதல் இடத்தை இழந்துவிட்டேன் என்று இனி யாரும் கவலை கொள்ள மாட்டார்கள்.
கல்வி வியாபாரத்துக்கு ஆப்பு
கல்விச் சந்தையில் ஈடுபட்டு கோடிகோடியாக பணம் குவிக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள்தான் அதிர்ச்சியடையும். அவர்கள் இனி பெரிய அளவுக்கு கல்வி வியாபாரத்தில் எங்கள் பள்ளி முதலிடம் என்று கூறிக்கொள்ளமுடியாது.
இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.