ரேசன் சர்க்கரை இனி கசக்கும் - நவ. 1 முதல் கிலோ ரூ.25க்கு விற்பனை
ரேசனில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை விலையை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.
Recommended Video

சென்னை: நவம்பர் 1ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.11.50 உயர்த்தப்பட்டு ரூ.25க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு நேற்றிரவு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டுள்ள அரசாணை: தமிழக அரசு ஒரு நபருக்கு 500 கிராம் சர்க்கரரை என்ற அளவில் அதிகபட்சம் ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ சர்க்கரை வழங்கி வருகிறது.
சர்க்கரை கார்டுகளுக்கு ஒரு நபருக்கு 1.5 கிலோ வீதம் அதிகபட்சமாக ஒருகுடும்பத்திற்கு மாதம் 5 கிலோ வரை வழங்கப்படுகிறது. இந்த சர்க்கரை கிலோ ரூ.13.50க்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.
2005-2006ல் 21 ஆயிரம் மெட்ரிக்டன் சர்க்கரை ஒவ்வொரு மாதமும் தமிழகத்தில் விநியோகம் செய்யப்பட்டது. 2016-17ல் இந்த அளவு 33,636 மெட்ரிக் டன்னாக உயர்ந்து விட்டது.

ஒரு கிலோ சர்க்கரை ரூ.13.50
மத்திய அரசு 10,833 மெட்ரிக் டன் சர்க்கரை மட்டுமே மாநில அரசுக்கு விநியோகம் செய்து வந்தது. ஆனால் தமிழக அரசு தற்போது 37,163 மெட்ரிக் டன் சர்க்கரையை பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ரூ.13.50 விலைக்கு வழங்கி வந்தது. மத்திய அரசு வழங்கிய சர்க்கரை தவிர மீதம் உள்ள சர்க்கரையை தமிழக அரசு வெளி மார்க்கெட் விலைக்கு வாங்கி விநியோகம் செய்து வருகிறது.

கிலோவுக்கு ரூ.18.50 மானியம்
இதற்கு தமிழக அரசு மாதம் ரூ.20 கோடி மத்திய அரசிடம் இருந்து மானியம் பெற்று வந்தது. 10,833 மெட்ரிக் டன் சர்க்கரைக்கு கிலோவுக்கு ரூ.18.50 மட்டும்தான் மத்திய அரசு மானியம் தந்தது. இதனால், மாநில அரசுக்கு மாதம் ரூ.14 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள்
மத்திய அரசு உத்தரவுப்படி தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் வறுமைக்கோட்டுக் கீழ் எந்த குடும்பமும் கண்டறியப்படவில்லை என்றாலும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டம் கீழ் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ
இவர்களுக்கும் சர்க்கரை விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்தது. பொதுவிநியோக திட்டத்தில் அந்தியோதயா அன்னயோஜனா பயனாளிகளுக்கு மட்டுமே சர்க்கரை மானியம் வழங்க வேண்டும். அவர்களுக்கும் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

மாநில அரசுகளின் தலையில் சுமை
தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூ.18.50 மானியம் மத்திய அரசு வழங்கி வருகிறது. மற்ற செலவுகளை அந்தந்த மாநிலங்கள் தான் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 1.6.2017 உத்தரவுப்படி தமிழ்நாட்டில் உள்ள 18.64 லட்சம் அந்தியோதயா அன்னயோஜனா கார்டுகளுக்கு மட்டும் 1,864 மெட்ரிக் டன் சர்க்கரைக்கு மானியம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

தமிழக அரசுக்கு கூடுதல் செலவு
இதனால் மத்திய அரசு தரும் மானியம் மாதம் ரூ.20 கோடியில் இருந்து ரூ.3.45 கோடியாக குறைந்துவிட்டது. தமிழக அரசுக்கு இதனால் மாதம் ரூ.108 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது. 33,636 மெட்ரிக் டன் சர்க்கரை விநியோகத்திற்கும் சேர்த்து தமிழக அரசு ரூ.1300 கோடி மாதம் வழங்க வேண்டிய நிலை உருவாகி கூடுதல் சுமை ஏற்பட்டது.

நவ.1 முதல் ரேசன் சர்க்கரை விலை உயர்வு
இதனால் நவம்பர் 1 முதல் அந்தியோதயா அன்னயோஜனா பயனாளிகளுக்கு மட்டும் கிலோ ரூ.13.50 விலையில் வழங்கப்படும். மற்றவர்களுக்கு கிலோ ரூ.25க்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சர்க்கரை மட்டும் பெறும் பயனாளிகளுக்கும் கிலோ ரூ.25க்கு வழங்கப்படும்.

ஒரு கிலோ ரூ. 45க்கு விற்பனை
இந்த விலை உயர்ந்த போதும் வெளிமார்க்கெட்டில் ரூ.45க்கு விற்கப்படும் சர்க்கரை ரூ.20 மானியம் வழங்கி கிலோ ரூ.25க்கு மட்டுமே வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 836.29 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யாருக்கு விலை உயர்வு இல்லை
தமிழக அரசின் இந்த அரசாணைப் படி அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 18.64 லட்சம் பேர் மட்டுமே ரூ.13.50க்கு வாங்க முடியும். மீதம் உள்ள சுமார் 1.88 லட்சம் பேர் சக்கரை கிலோ ரூ.25 கொடுத்து வாங்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications