சில்லரை தட்டுப்பாடு.. டிச.30 வரை சுங்கவரி ரத்து நீட்டிக்க வேண்டும்: விக்கிரமராஜா கோரிக்கை
டிசம்பர் 30 வரை சுங்கவரி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என விக்கிரமராஜா கூறியுள்ளார்.
சென்னை: சில்லரை தட்டுப்பாடு முறையாக தீர்க்கபடாததால் டிசம்பர் 30 வரை சுங்கவரி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கத்தில் 150வது வட்ட வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் தேர்வு மற்றும் அறிமுக விழா நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த பிறகு டோல்கேட் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இன்று முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என கூறுகின்றனர். டிசம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்துகிறது. காரணம், இன்னும் சில்லரை தட்டுப்பாடு முறையாக தீர்க்கப்படவில்லை. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, சுங்க கட்டணம் வசூலிப்பதை டிசம்பர் 30 வரை தள்ளி வைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.