எவ்ளோ பெரிய நிலா.. இன்று வானில் வலம் வந்த சூப்பர் மூன் !
இன்று இரவு வானில் தோன்றிய சூப்பர் நிலாவை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
சென்னை: 68 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் நிலா இன்று வானில் தோன்றியது. சென்னனை மெரினாவில் கூடிய மக்கள் பெரிய நிலாவை பார்த்து ரசித்தனர்.
பூமியைச் சுற்றி வரும் நிலா சுமார் 70 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூமிக்கு மிக அருகில் தெரியும். வழக்கத்தைவிட நிலா சுமார் 14 சதவீதம் பெரிதாக தெரிந்தது.
பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலா, அதன் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. 'சூப்பர் நிலவு' நிகழ்வு ஏற்படும்போது 48 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நிலா பூமிக்கு அருகில் வந்து செல்லும். அதனாலேயே இந்த அதிசய நிகழ்வின்போது நிலா சற்று பெரியதாகவும், கூடுதல் ஒளியுடனும் காணப்படும் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம், அதாவது நிலவை அருகில் இருந்து பார்ப்பது போல தோன்றும். வழக்கமான ஒளியை விட 30 சதவீதம் கூடுதலான ஒளியுடன் இன்று இந்த நிலவு தோன்றியது.
கடந்த 1948ம் ஆண்டு இதுபோன்ற நிகழ்வு வானில் தோன்றியது. அதற்கு பிறகு 68 வருடங்களுக்கு பிறகு இன்று இந்த பெரிய நிலா வானில் தோன்றியது. வானம் தெளிவாக இருந்தால் சில இடங்களில் இது தெளிவாக தெரிந்தது. சென்னை உட்பட தமிழகத்தின் எல்லா இடங்களிலில் இருந்தும் மக்கள் வெறும் கண்களாலேயே இதை பார்த்து ரசித்தனர். சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வழக்கத்தை விட பெரிய அளவில் நிலா தெரிந்தது. அங்கு திரண்டிருந்த திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பெரிய நிலாவை கண்டு ரசித்தனர்.
இன்று பார்க்க முடியாதவர்கள் கூட, அடுத்த மாதம் 14ம் தேதி மீண்டும் பார்த்து ரசிக்கலாம். அல்லது, அடுத்த ஆண்டு டிசம்பரில் பார்க்கலாம்.