பெரியாரை இழிவுபடுத்தி பேசிய பாஜக தலைவர் எச்.ராஜா பேச்சுக்கு தமுஎகச கண்டனம்
மதுரை: பெரியாரை இழிவுபடுத்தி பேசிய பாஜக தலைவர் எச்.ராஜா பேச்சுக்கு தமுஎகச கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் சார்பில் , மாநிலச்செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வெங்கடேசன் முன்னிலை விகித்தார்
இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச் செல்வன் , பொதுச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பேசினர். அப்போது அவர்கள், ‘தமிழகத்தில் சமூகநீதி, பண்பாட்டுப் போராளியாக இறுதி மூச்சு வரை வாழ்ந்த தந்தை பெரியார் அவர்களை பாஜக மாநிலத் துணைத் தலைவர் எச். ராஜா ஒருமையில் பேசுகிற பேச்சு இணையத்தில் வெளிவந்துள்ளது.
இந்தப் பேச்சில் அவர் பயன்படுத்தியுள்ள சொற்கள் சுயமரியாதைக் கருத்துகளையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் பரப்பிய அந்த மகத்தான தலைவரை மிகவும் இழிவுபடுத்துவதாக உள்ளது. இந்தப் பேச்சை எச். ராஜா என்ற தனிமனிதரின் கருத்தாக மட்டும் பார்க்க இயலாது.
சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளை, அறியாமையை, புராணப்புளுகுகளை அம்பலப்படுத்தி அயராது, சமரசம் செய்து கொள்ளாமல் பரப்புரை செய்தவர் பெரியார். இப்போதும் சாதி வெறிக்கும் மத வெறிக்கும்எதிராக,பெண்ணுரிமைக்கு ஆதரவாக முன்னெடுக்க வேண்டிய கருத்தாயுதங்களைப் பெரியாரிடமிருந்து பெற முடிகிறது.
எந்தத் தருணத்திலும் மதவாத பிற்போக்கு சக்திகளால் நெருங்க முடியாத நெருப்பாக பெரியார் திகழ்வதால் காழ்ப்புணர்வு முன்வைக்கப்படுகிறது.
புதிய தலைமுறை இளைஞர்களைத் திசை திருப்புவது, சங் பரிவார இந்துத்துவா சக்திகளுக்கு வெறியேற்றுவது, கருத்துக்களத்தில் விவாதத்தை முன்வைப்பதற்கு பதிலாக மூர்க்கத்தை மூலதனமாக்கி ஆதாயம் தேடுவது என்று முயல்கிறார்கள். எனவே, எச். ராஜா பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவர்கள் பேசினார்கள்.
அதனைத் தொடர்ந்து, எச். ராஜாவின் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கு தமுஎகச மாநிலச் செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பெரியாரை இழிவுபடுத்தும் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் உடனடியாக சுவரொட்டி இயக்கம் நடத்த வேண்டும் என்றும், சென்னையில் கண்டனக் கருத்தரங்கம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.