நெல்லையில் நாளை எம்ஜிஆர் நூற்றாண்டு... முதல்வர் வருகையால் போக்குவரத்து மாற்றம்!
திருநெல்வேலியில் நாளை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி : நெல்லையில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி வருவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக நெல்லை நகரில் புறநகர் பேருந்துகள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆரின் நினைவை போற்றும் வகையிலும், அவர் ஆற்றிய பணிகள், அவர் பற்றிய வரலாறு இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி மதுரையில் தொடங்கிய இந்த விழாவானது திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர், திருச்சி, தேனி மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது.
அடுத்தகட்டமாக நாளை நெல்லையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள பள்ளி மைதானத்தில் இந்த விழா நடக்கிறது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
போக்குவரத்தில் மாற்றம்
நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நெல்லை நகரில் புறநகர் பேருந்துகள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி, சேரன்மகாதேவி, பேட்டை பகுதிகளில் இருந்துவரும் புறநகர் பேருந்துகள் நெல்லை டவுணில் உள்ள தொண்டர் சன்னதி, சாலியர் தெரு, ராமையன்பட்டி விலக்கு, தச்சநல்லூர் சந்தி மறிச்சம்மன் கோயில், தச்ச நல்லூர் வடக்கு புறவழிச் சாலை, மணிமூர்த்தீஸ்வரம், வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம், ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையம் வழியாக புதிய பேருந்துநிலையம் சென்றடைய வேண்டும்.
மாற்று வழித்தடம்
புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசி, சேரன் மகாதேவி, பேட்டை மார்க்கமாக செல்லும் பஸ்கள் ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையம், அண்ணாசாலை, ரோஸ் மகால், அறிவியல் மையம், கொக்கிரகுளம், சந்திப்பு, திருநெல்வேலி நகரம் ஆர்ச், தெற்கு மவுண்ட்ரோடு, காட்சி மண்டபம் வழியாக செல்ல வேண்டும். திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரும் பேருந்துகள், சீனிவாச நகர் லட்சுமி மஹால், மேட்டுத்திடல் ரவுண்டானா, பாளை பேருந்து நிலையம் வழியாக புதிய பஸ் நிலையம் சென்றடைய வேண்டும்.
8 மணி முதல் மாலை வரை மாற்றம்
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி செல்லும் பஸ்கள் பாளை பஸ் நிலையம், மேட்டுத்திடல் ரவுண்டானா, சீனிவாச நகர் ரவுண்டானா வழியாக செல்லவேண்டும். டவுண் பஸ்கள் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து ராம் தியேட்டர், மணிமூர்த்தீஸ்வரம், வடக்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை செல்லப் பாண்டியன் மேம்பாலம் மேல் பகுதி, ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையம் வழியாக புதிய பஸ் நிலையம் சென்றடைய வேண்டும். இப்போக்குவரத்து மாற்றம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை வரை அமலில் இருக்கும் என நெல்லை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
பிரம்மாண்ட பலூன்கள்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகரம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்று பேனர்கள், தோரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பாளையங்கோட்டையில் பிரம்மாண்டமான பலூன் பறக்க விடப்பட்டுள்ளது. வண்ணார்பேட்டையில் இருந்து விழா நடைபெறும் பள்ளி மைதானம் வரை அ.தி.மு.க. கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.