ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக முயற்சிக்கும் டிராபிக் ராமசாமி
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிற்க விரும்புவதாக டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு வரும் ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என திமுகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டன.

அதிமுக சார்பில் அத்தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவார் எனத் தெரிகிறது. பிறகட்சிகள் தங்களது முடிவைத் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், பொதுநலன் கருதி வழக்குகள் தொடுத்து வருபவரும், மக்கள் பாதுகாப்புக் கழகம் என்ற கட்சியை நடத்தி வருபவருமான டிராபிக் ராமசாமி எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நிற்பதற்கு எல்லாக் கட்சிகளுக்குமே சிறு தயக்கம் இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக நிற்க விரும்புகிறேன். இதற்காக திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரிடமும் ஆதரவு கேட்க உள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications