திட்டமிட்டபடி தொடர்கிறது பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்.. தமிழகம் முழுவதும் மக்கள் பாதிப்பு
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
சென்னை: தமிழக போக்குவரத்து துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன. இதனையடுத்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பல கட்டங்களாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன்களை வழங்க ஆயிரத்து 250 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். எனினும், இந்த தொகை போதாது என அதிருப்தி வெளியிட்ட தொழிற்சங்கங்கள், ஏற்கனவே திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடருவது என முடிவெடுத்து அறிவித்தன.
இருப்பினும், சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் முன் கூட்டி நேற்றே ஸ்டிரைக் தொடங்கியது. நீலகிரி, வேலூர், திருச்சி, தஞ்சை, தேனி, அரியலூர், உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள 7 பனிமனைகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள 6 பனிமனைகளிலும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெளியூர்ப் பேருந்துகளை முழுமையாக நிறுத்தியுள்ளனர்.
திருச்சி, மதுரை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல இடங்களில் பேருந்துகள் ஓடவில்லை. பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. சென்னையில் உள்ள 36 பனிமனைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 15ooo போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசம்பாவித சம்பவங்களை தடுக்க தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். சட்டம் ஓழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை கூறியுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் குறைவான அளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. பல பேருந்துகள் பனிமனையிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலை நீடித்தால் பஸ் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகலாம். எனவே அரசு உடனடியாக தலையிட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications