சபரிமலைக்கு மாலை போட்ட மாணவியை கஞ்சா போதையில் சீரழித்த கயவர்கள்.. தேனி அருகே அக்கிரமம்!
தேனி: போதைப்பழக்கம்தான் பலாத்கார சம்பவத்திற்கு மூலகாரணமாக அமைகிறது என்று தூத்துக்குடி புனிதா கொலைவழக்கில் இருந்தே இது புலனாகியுள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் பல பலாத்கார சம்பவங்களுக்கு மதுபோதையே காரணமாக இருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் எத்தனையோ முறை எடுத்துச்சொல்லியும், மதுக்கடைகளை மூடுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது தமிழக அரசு.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கடந்த ஒன்றாம் தேதி சபரிமலைக்கு மாலைபோட்டிருந்த 10 வயது சிறுமியை கஞ்சா போதையில் இருந்த மூன்று கயவர்கள் கசக்கி பிழிந்து கிணற்றில் வீசி கொன்றுள்ளனர். இந்த கொடூரமான பலாத்கார கொலை தமிழகத்தில் எந்த வித அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை.
அந்த அதிர்ச்சி விலகும் முன்னதாக வேலூரில் பொறியியல் மாணவி ஆட்டோ ஓட்டுநரால் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அந்த சுவடு மறையும் முன்னதாக வேலூர் குடியாத்தம் அருகே கே.வி. குப்பத்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு பள்ளி மாணவி நேற்று பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த படுகொலையை செய்தது பள்ளி மாணவர்கள் என்று இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உபேர் கால்டாக்ஸியில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு நடைபெற்ற போராட்டமோ, ஒருவித கொதிப்போ தமிழகத்தில் எழவில்லை. காரணம் என்னவென்றும் தெரியவில்லை. நம்வீட்டு பிள்ளைகள் பத்திரமாக இருக்கிறார்களா என்ற மனநிலைக்குத்தான் இப்போது தள்ளப்பட்டுள்ளனர்.
தேனியில் பலாத்காரத்திற்குள்ளாகி கொல்லப்பட்ட நந்தினி ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள். மாலைபோட்ட தனது மகளை பறிகொடுத்த தாய் காளீஸ்வரி கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்.
சபரிமலைக்கு மாலை போட்ட நந்தினிக்கு காய்ச்சல் வரவே காமாச்சி புரம் அருகே மேற்கு காலனியில் உள்ள தனது அக்காவின் வீட்டில் தங்க வைத்துள்ளார். கன்னி சாமி என்பதால் கவனமாக இருக்கவேண்டும் என்று குருசாமி கூறியதை கேட்டே இந்த நடவடிக்கை எடுத்தாராம்.
சம்பவ தினமான டிசம்பர் 1ஆம்தேதி மழையால் பள்ளி சீக்கிரம் விட தனது வீட்டிற்கு வந்து அம்மாவையும், தம்பியையும் பார்த்துவிட்டு மாமா வீட்டுக்கு போனவள்தான் கிணற்றில் சடலமாகத்தான் பார்க்க முடிந்தது.
இந்த கொலையில் மூன்று பேரை கைது செய்துள்ளது போலீஸ். இந்த கொடூர சம்பவத்தை செய்த கயவர்களே காணமல் போன நந்தினியை தேடியுள்ளனர். கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டது இவர்கள்தான் என்கிறார் நந்தினியின் தாயார்.
இவர்கள் எப்போதும் குடி கஞ்சா போதையில தான் இருப்பார்களாம். போதையில் பலாத்காரம் செய்து கொன்று கிணற்றில் வீசியுள்ளனர் படுபாதகர்கள். ஆனால் தமிழக முதல்வரின் மாவட்டமான தேனி மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதற்கான அறிகுறியே இல்லாமல் நாட்கள் கடந்து போயுள்ளன என்பதே அதிர்ச்சிகரமான உண்மை.
.தாழ்த்தப்பட்டவர்களின் மேல இருக்குற ஒடுக்குமுறைக்கு எதிராக எங்களோட அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு மூலமாக ஒரு அமைதியான முறையில ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி கேட்டோம். சட்டம்-ஒழுங்கு பிரச்னை வரும் என்று சொல்லி அனுமதி மறுத்துட்டாங்க என்கிறார் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் மாநில அமைப்பு செயலாளர் சு.க.சங்கர்.
அதேசமயம் இந்த சம்பவத்தில் மூன்று பேர் மட்டுமில்லை. இவ்வழக்கில் இன்னும் சிலர் குற்றவாளிகளாக கைது செய்யப்பட வேண்டியவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்களையும் கைது செய்து இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிடவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கல்லூரிக்கு போகும் மகளிடம்தான் பத்திரமாக போய்வா என்று அம்மாக்கள் அறிவுரை கூறுவார்கள். ஆனால் இன்றைக்கோ தமிழகத்தில் பச்சிளம் சிறுமிகள் கூட பாதுகாப்பாக பள்ளி சென்று திரும்பி வர முடியாத நிலையே நிலவுகிறது என்பது நிதர்சனமான உண்மை.