வைகோவை மலேசிய அரசு நடத்திய விதம் அதிர்ச்சி அளிக்கிறது - டிடிவி தினகரன்
மலேசிய விமான நிலையத்தில் வைகோ தடுத்து நிறுத்தப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மலேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின், பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் இராமசாமி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற வைகோ, கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவரை சுமார் 16 மணிநேரங்கள் விமான நிலையத்திலேயே வைத்திருந்து விசாரணை நடத்திய அதிகாரிகள், மலேசியாவுக்கே, வைகோ ஆபத்தானவர் என கூறி இந்தியாவுக்கு திருப்பியனுப்பிவிட்டனர். மலேசிய அதிகாரிகள் வைகோவை தடுத்து நிறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மலேசிய விமான நிலையத்தில் வைகோ தடுத்து நிறுத்தப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில், மலேசிய அரசு வைகோவை நடத்திய விதம் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் முறையாக விசா பெற்றவரை தனி அறையில் அடைத்து வைத்தது கண்டனத்துக்குரியது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மலேசிய அரசிடம் மத்திய அரசு விசாரித்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.