அதிமுக ஆட்சி கலையாமல் இருக்க வேண்டுமா.. தினகரன் கூறும் புதிய யோசனை
அதிமுக ஆட்சி கலையாமல் அதன் பதவி காலத்தை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்றால் அங்கிருக்கும் எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என தினகரன் கருத்து தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: அதிமுக ஆட்சி கலையாமல் அதன் முழு பதவிக் காலத்தை அடைய வேண்டும் என்றால் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என்று ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களுக்கு தினகரன் யோசனை தெரிவித்தார்.
ஆர்கே நகரில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி வெற்றார். அவர் இன்றைய தினம் பதவியேற்க சட்டசபைக்கு வந்தார்.
சபாநாயகர் தனபால் அறையில் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்யப்பட்டது. அப்போது சபாநாயகர் தினகரனுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தினகரன் பேட்டி
ஆர்கே நகர் எம்எல்ஏவாக தினகரன் பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வரலாற்றில் என்றுமே துரோகம் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. சசிகலா தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக.
மக்களின் பிரதிபலிப்பு
ஆர்கே நகர் வெற்றி மூலம் 6.5 கோடி மக்களின் பிரதிபலிப்பு வெளிப்பட்டுள்ளது. கட்சியும், சின்னமும் யாரிடம் இருக்கிறது என்பது ஒரு பொருட்டே அல்ல. அதிமுகவின் ரத்தமும் ,சதையுமான தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதே முக்கியமானதாகும்.
எங்கள் பக்கம்
எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் மனதளவில் எங்கள் பக்கம் உள்ளனர். ஆர்கே நகர் தோல்வி பதற்றத்தால் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் நிர்வாகிகளை நீக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பதவிக்காக 5 அல்லது 6 பேரின் சுயநலத்துக்கு துணை போக வேண்டாம்.
ஆட்சி கவிழும்
இந்த துரோக அதிமுக ஆட்சி இன்னும் 2 மாதங்களில் கவிழ்ந்து விடும். ஆட்சி கலையாமல் இருக்க எங்கள் பக்கம் வந்துவிடுங்கள். ஸ்லீப்பர் செல்கள் சட்டசபை வாக்கெடுப்பின் போது வெளியே வருவர். ஜனவரி 20-ஆம் தேதிக்குள் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் வழக்கு விசாரணைக்கு வரும்.