பொங்கல் மாதத்தில் மஞ்சள் குலை விளைச்சல் அமோகம் - பிரகாசத்தில் விவசாயிகள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு மஞ்சள் குலை அறுவடையை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு முக்கிய கிராம பகுதிகளில் மஞ்சள் பயிரிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு விளைச்சல் நல்ல முறையில் இருக்கிறது.
குறிப்பாக சாயர்புரம் பகுதி விவசாயிகள் இவற்றை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். மேலும் கோரப்பள்ளம், அத்திமரப்பட்டி, செபத்தையாபுரம், தங்கம்மாள்புரம், சங்கம்மாள்புரம், கூட்டம்புளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை அதிகமாக பெய்ததால் மஞ்சள் குலைகள் அனைத்தும் பச்சை பசைலென செழித்து வளர்ந்துள்ளன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாளே உள்ளன. தற்போது மஞ்சள் செடிகளை தோண்டி எடுத்து மஞ்சள் கிழங்குகளில் இருக்கும் மண்ணை கழுவி சுத்தம் செய்து வருகின்றனர்.
இவைகள் தூத்துக்குடி மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனை அனுப்பி வைக்கப்படுகின்றன. செழித்து வளர்ந்துள்ள மஞ்சள் செடிகளால் நல்ல வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.