ஸ்டெர்லைட் போராட்டம் சமூக விரோதிகளால் திசைமாறுகிறது... ஆட்சியர் எச்சரிக்கை!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் சமூக விரோதிகளால் திசை திருப்பப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் போராட்டம் காரணமாக பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 12 கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு, சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை இங்கு செயல்படவே வேண்டாம் என்று மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கியதால் குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். மக்கள் 60 நாட்களைக் கடந்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்துவிட்டது.
எனினும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என்று மக்கள் தெரிவித்துவிட்டனர். இதனிடையே நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தடுப்பு வேலிகளை உடைத்துச் சென்று இந்திய மாணவர் அமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் காவலையும் மீறி மாணவர்கள் சுமார் 2 மணி நேரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேஷ் போராட்டக்காரர்களை எச்சரித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் சில சமூக விரோதிகளால் திசை திருப்பப்படுகிறது. மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன.
மக்களுக்கு அச்ச உணர்வை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டக்காரர்களின் கோரிக்கையை பரிசீலித்து அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் ஆட்சியர் கூறியுள்ளார்.