காவிரி: தமிழக எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்து வீதிகளில் இறங்கிப் போராட வேல்முருகன் வலியுறுத்தல்!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு திடீரென எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பது தமிழக மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த பச்சைபடுபாதக துரோகத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.
கர்நாடகா அரசை கலைக்க வேண்டும்
உச்சநீதிமன்ற விசாரணையில் கடந்த 30-ந் தேதியன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மேலாண்மை வாரியத்துக்கான பிரதிநிதிகளை தமிழகம், கேரளா, புதுவை மாநிலங்கள் பரிந்துரைத்துள்ளன. ஆனால் கர்நாடகா மட்டும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்தும் மதிக்காமல் தமிழகத்துக்கான நீரை திறந்துவிட மறுத்துவருகிறது; காவிரி மேலாண்மை வாரிய பிரதிநிதியை பரிந்துரைக்கவில்லை. இப்படியான கர்நாடகாவை மத்திய அரசு நியாயப்படி கண்டித்திருக்க வேண்டும். அரசியல் சாசன நெருக்கடியை உருவாக்கும் கர்நாடகா அரசை மத்திய அரசு கலைத்திருக்க வேண்டும். இதுதான் நியாயமான நீதியாகும்.
தமிழகத்தின் முதுகில் குத்துவதா?
இதற்கு நேர்மாறாக வஞ்சிக்கப்பட்ட தமிழகத்தின் முதுகிலே குத்துகிற வகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்திலே மத்திய அரசு மனுத்தாக்கல் செய்திருப்பதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். பாஜகவின் படுபாதக துரோகத்துக்கு தமிழக மக்கள் நிச்சயம் தக்க பாடம் புகட்டுவார்கள்...
இழுத்து மூடனும்
தமிழகத்திலே இயங்கும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களை இழுத்து மூடும் போராட்டத்தைதான் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும். தமிழகத்துக்கு தொடர்ந்து மத்திய அரசு துரோகம் இப்படி இழைக்கிறது என்பதால்தான் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
தமிழகம் இந்தியாவில் இல்லையா?
கர்நாடகா இந்தியாவின் ஒருமாநிலம்தானே? இந்திய கூட்டாட்சி முறைக்கு மதிப்பு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அன்று கூறியது... ஆனால் இன்று மத்திய அரசே, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என பிரகடனம் செய்வது போல, தமிழகம் ஏதோ தனிநாடாகிவிட்டது போல தொடர்ந்து வஞ்சித்து வருவது இந்திய ஒருமைப்பாட்டுக்கு மத்திய அரசு தமக்கு தாமே வேட்டு வைத்துக் கொண்ட செயலே தவிர வேறு எதுவும் இல்லை.
எம்பிக்கள் ராஜினாமா செய்க
இந்திய மத்திய பேரரசின் இந்த நயவஞ்சகத்தைக் கண்டித்து ஒட்டுமொத்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை ராஜினாமா செய்து கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே ரத்து செய்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுகிற போராட்டங்களை அனைத்து கட்சிகளும் முன்னெடுக்க வேண்டும்.
வீதிக்கு வாருங்கள்...
இத்தகைய போராட்டங்கள், எதிர்ப்புகள் மூலமே தமிழகம் பறிகொடுத்துக் கொண்டிருக்கிற வாழ்வுரிமைகளை, தமிழன் வஞ்சிக்கப்படும் இழிநிலைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும். தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் ஓரணியில் ஒன்று திரண்டு இந்திய மத்திய பேரரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த வீதிகளில் இறங்குவோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவல் விடுக்கிறது.
இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.