சென்னையில் வேல்முருகன் தலைமையில் என்எல்சி தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதம்!!
சென்னை: என்.எல்.சி நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 30 ஆண்டுகாலமாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 10-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் தலைமையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
நெய்வேலியில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்ட பேருந்துகளில் புறப்பட்டு வந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் தி. வேல்முருகன் கூறியதாவது:
என்எல்சி நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டு காலமாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணி செய்து வருபவர்கள் குறைந்த ஊதியத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். 10,600 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் இதுவரை செய்யப்படவில்லை.
இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னையில் தமிழக முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி தொழிலாளர் வாழ்வுரிமை சங்கத்தின் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. 2012ம் ஆண்டுக்குள் குறைந்தது 5 ஆயிரம் பேர் பணிநிரந்தரம் செய்வதாக கூறிய நிலையில் என்எல்சி நிர்வாகம் இதுவரை ஏமாற்றி வருகிறது.
இவ்வாறு தி. வேல்முருகன் கூறினார்.