மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் எஸ்ஐ கொல்ல முயற்சி- 2 பேர் கைது
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த லாரியை பிடிக்க முயன்ற பெண் எஸ்ஐ கொல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாமிரபரணியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால் உறை கிணறுகள் வெளியே தெரிந்தன. இதனால் குடிநீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும் புனித நதியான தாமிரபரணி அசுத்தமடைந்து வருவதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக மணல் அள்ள தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை தொடர்ந்து உச்சநீதிமன்றம் அங்கு மணல் அள்ள தடை விதித்தது. இந்த நிலையில் செங்கல் சூளை உரிமையாளர் செந்தில் பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கங்கைகொண்டான் சப் இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி, சிறப்பு எஸ்ஐக்கள் வேலவன், சண்முகம், செல்வின் ஆகியோர் இரவு சிப்காட் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது சிற்றாரிலிருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற லாரியை அவர்கள் நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி வந்து அவர்கள் மேல் மோதி கொல்ல முயன்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்து சுதாரித்த தனலெட்சுமி உள்ளிட்ட 4 பேரும் விலகி ஓடி உயிர் தப்பினர். இதை தொடர்ந்து லாரியுடன் டிரைவர் தப்பி செல்ல முயற்சிக்கவே போலீசார் வயர்லெஸ் உதவியுடன் மற்ற செக்போஸ்டுகளை உஷார்படுத்தினர்.
லாரியை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். சுமார் 1 கிமீ தொலைவில் லாரியை மடக்கி பிடித்தனர். அதனை ஓட்டி வந்த டிரைவர் சிவலப்பேரியை சேர்ந்த கருப்பசாமி, லாரி உரிமையாளர் மறுகால்தலை முருகன் ஆகியோர கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.