உ.பி. அண்டை மாநிலமா??.. வடிவேலு சொல்ற மாதிரி சின்னப்புள்ளத்தனமாவுல்ல இருக்கு!
உத்தரப்பிரதேசத்தை அண்டை மாநிலம் என நடிகர் விஷால் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
சென்னை: விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் விஷால் எழுதிய கடிதத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க பதவிகளைக் கைப்பற்றிய விஷால், அரசியல் கட்சியை தொடங்கலாம் என கூறப்படுகிறது. அண்மையில் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டங்களில் தலைகாட்டியிருந்தார் விஷால்.

எடப்பாடிக்கு கடிதம்
இந்நிலையில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விஷால் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.

அண்டை மாநில சர்ச்சை
அக்கடிதத்தில் நமது "அண்டை மாநிலங்களான" உத்தரப்பிரதேசத்திலும் மஹாராஷ்டிராவிலும் விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ததை அறிந்து பஞ்சாப் மாநில அரசும் கடன்களை ரத்து செய்துள்ளது. நமது அண்டை மாநிலங்கள் செய்ததைப் போல தாங்களதும் நமது தமிழ்நாட்டின் ...." என நீள்கிறது அக்கடிதம்.

எப்படி அண்டை மாநிலமாகும்?
தமிழகத்துக்கு அண்டை மாநிலம் என்றால் கேரளா, கர்நாடகா, ஆந்திராதான். கர்நாடகாவைத் தாண்டி இருக்கும் மகாராஷ்டிராவும் டெல்லியை ஒட்டி இருக்கும் உத்தரப்பிரதேசமும் பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் பஞ்சாப் மாநிலமும் எப்படி தமிழகத்தின் அண்டை மாநிலமாகும் என்பது சமூக வலைதளவாசிகளின் கேள்வி.

வடிவேல் சொல்ற மாதிரியே இருக்கே
அத்துடன் நடிகர் வடிவேல் பட காமெடி காட்சி வசனத்தைப் போல இந்தா இருக்கிற தமிழகத்தை அப்படியே அலேக்காக தூக்கி டெல்லிக்கு பக்கத்துல வெச்சிட்டாரோ விஷால் என்கிற ஏகடியங்களும் சமூகவலைதள பக்கங்களில் எதிரொலிக்கிறது.












Click it and Unblock the Notifications