மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த்? பதிலுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கும் வைகோ...
திருச்சி: மக்கள் நலக் கூட்டணியில் இணையவேண்டும் என்ற அழைப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அளிக்கப் போகும் பதிலுக்காக காத்திருப்பதாக மதிமுக பொதுச்செயலரும் அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சியில் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டிதனமானது என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஜெய்ராம் ரமேஷ் பயன்படுத்திய வார்த்தைகள் தமிழக மக்களை புண்படுத்தி உள்ளது. ஆகையால் இதற்கு அவர் வருத்தம் தெரிவித்து தாம் தெரிவித்த வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும்.
அதிமுகவுக்கு குட்டு- பொன்னாருக்கு பாராட்டு
47 எம்.பி.க்களை கொண்டுள்ள அ.தி.மு.க. ஜல்லிக்கட்டுக்காக நாடாளுமன்றத்தில் அழுத்தமாக குரல் கொடுக்கவில்லை. இந்த விஷயத்தில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜயகாந்த் பேலன்ஸ்
பெரம்பலூரில் நடந்த தே.மு.தி.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், அ.தி.மு.க., தி.மு.க.வை விமர்சித்து பேசி உள்ளார். 2 கட்சிகளையும் அவர் சற்று தூரத்தில் தான் வைத்து உள்ளார்.
அவருக்காக காத்திருக்கிறோம்
அவருக்கு மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு நாங்கள் முழுமனதோடு அழைப்பு விடுத்துள்ளோம். அவர் மாநில மாநாடு முடிந்ததும் தனது முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளார். மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற அவரது பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
நாடகமாடும் கருணாநிதி
இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் துரோகம் விளைவித்துவிட்டன. இலங்கை தமிழர்கள் பிரச்னையை தீர்க்க இரு கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியே வந்தேன். மதுவிலக்கிற்காக 1,700 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். மதுவை கொண்டு வந்த கருணாநிதி, தற்போது தேர்தல் வருகிறது என்பதற்காக மதுவிலக்கு என நாடகமாடுகிறார்.
கரும்பு விவசாயிகள்
விவசாயிகளுக்கு 2 ஆண்டுகளாக கிடைக்க வேண்டிய நிலுவை தொகை ரூ.964 கோடியை சர்க்கரை ஆலைகளிடம் இருந்து பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பு ஆண்டுக்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கரும்பு கொள்முதல் விலையை அராசு தீர்மானிக்க வேண்டும்.
ஏழு தமிழர் விடுதலை
உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி அரசியல் சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்தி ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கால் நூற்றாண்டு காலமாக சிறையில் வாடும் அவர்களை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறினார்.