ஜெ. மரணம் குறித்து கோர்ட் கருத்துக் கூறக் கூடாது என்று சொல்ல வருகிறாரா வைகோ?
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்தது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. நீதிபதியின் கருத்து வேதனை தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீதிபதியின் கருத்து வேதனைக்குரியது. அவர் அதைத் தெரிவித்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார் வைகோ. ஜெயலலிதாவின் மரணத்தைக் கொச்சைப்படுத்துவதாக அந்தக் கருத்து உள்ளதாகவும் வைகோ கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார். இதை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் பெஞ்ச், இதே சந்தேகம் தனக்கும் உள்ளதாக தெரிவித்தது. மேலும் நீதிபதி வைத்தியநாதன் கூறுகையில், நான் இந்த வழக்கை விசாரிப்பதாக இருந்தால் ஜெயலலிதாவின் உடலை வெளியில் எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிடுவேன் என்றும் கூறி அதிர வைத்தார்.

அதிமுக தொண்டர்கள் வரவேற்பு
நீதிபதியின் இந்தக் கருத்துக்கு, ஜெயலலிதாவின் திடீர் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களுடன் இருக்கும் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம், சில தலைவர்கள் மட்டும் இதற்கு அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அந்த ஒரு சில தலைவர்களில் வைகோவும் இணைந்துள்ளார்.

சென்னையில் பேட்டி
இதுகுறித்து இன்று தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் வேதனை அளிக்கிறது. அப்படி ஒரு கருத்தை அவர் தெரிவித்து இருக்க கூடாது.

கொச்சைப்படுத்துகிறார் நீதிபதி
இது அவரது மரணத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஒரு புகைப்படமாவது வெளியிட்டு இருக்கலாமே என்கிறார்கள். அவர் ஒரு பெண்மணி. அதிலும் அரசியல் அரங்கில் தலைவர்களால் மதிக்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்காது என்று கருதி இருக்கலாம்.

கூட்டணி குறித்து சொல்வதற்கு இல்லை
மதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற பிப்ரவரி 26ம் தேதி நடக்கிறது. மக்கள் நலக்கூட்டணியில் இருந்து நாங்கள் விலகியதற்கான காரணத்தை ஏற்கனவே விளக்கமாக கூறிவிட்டேன். அது பற்றி இனி எதுவும் சொல்வதற்கு இல்லை. தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. எனவே அந்த நேரத்தில் உரிய முடிவு எடுப்போம்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக முதலில் குரல் கொடுத்தது நான். இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து மனு கொடுத்தேன். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அந்த மனுவில் கையெழுத்திட்டார். தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருவதாக அறிகிறேன். அது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications