காவிரியில் புதிய அணைகள் கட்ட எதிர்ப்பு : நவ.22-இல் வைகோ மறியல்
திருவாரூர்: காவிரியில் 2 புதிய அணைகள் கட்ட கர்நாடகம் முயற்சிப்பதைக் கண்டித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நவம்பர் 22-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 2 புதிய அணைகள் கட்டுவதற்கு கர்நாடகம் முயற்சி செய்து வருகிறது.
இதனைத் தடுக்க வலியுறுத்தி காவிரி டெல்டா பகுதியில் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாய பிரதிநிதிகள் தமிழகத் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விவசாயப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்புக்குப் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது: காவிரி நதியினால் 12 மாவட்டங்கள் பயன்பெற்று வருகின்றன. 3 கோடி விவசாயிகள் மற்றும் 75 சதவீத தமிழக மக்களின் வாழ்வாதாரம் காவிரியை நம்பி உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் 2 அணைகள் கட்டப் போவதாக அறிவித்துள்ளது.
இதனைத் தடுக்க தமிழக மக்கள், அரசியல் கட்சிகள், வணிகர்கள் ஓரணியில் திரள வேண்டும். நவம்பர் 22-ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் நான் (பங்கேற்க உள்ளேன் என்றார்.
வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன், வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறும் கடையடைப்புக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.