சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழிப் பாடத்திட்டம் மூலம் சமஸ்கிருதத்தைத் திணிப்பதா? வைகோ கண்டனம்
சமஸ்கிருத மொழி, இந்தி மொழியை திணிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மும்மொழிப் பாடத்திட்டத்தை பத்தாம் வகுப்பு வரையில் கட்டாயமாக்கிட முடிவெடுத்து இருப்பது தேவையில்லாத வீண் முயற்சி ஆகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
நாட்டில் உள்ள 18 ஆயிரம் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தற்போது ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. ஆட்சிக்கு குழு தீர்மானித்து இருக்கிறது. இதன்படி இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் மூன்றாவதாக ஏதேனும் ஒரு இந்திய மொழியைக் கற்றுத் தருவதாகும். இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி அல்லது அந்தந்த மாநில மொழி ஆங்கிலம் இவற்றுடன் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்றுத் தருவது என்று தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்படுகிறது.
2014 இல் மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றவுடன், மத்திய அரசின் பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையில் மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியை கற்பிக்க மத்திய அரசு தடை வதித்தது.
இந்தத் தடையின் மூலம் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பயின்று வரும் எழுபது ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள், மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தை பயில வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர். மத்திய அரசின் இந்த சமஸ்கிருத மொழித் திணிப்பு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஜெர்மன் மொழி தொடரலாம் என்று அறிவித்தது.
தற்போது இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையில் மும்மொழி பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற முடிவால் மீண்டும் இந்தி சமஸ்கிருத மொழித் திணிக்கப்படுதற்கு மத்திய அரசு வழி வகுத்து இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு, பொதுத் தேர்வாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ள சூழலில், மும்மொழி பாடத்திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை நீட்டிப்பதால் மாணவர்களுக்கு மேலும் சுமை அதிகரிக்கும்.
மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தைக் கற்பிக்க மத்திய அரசு முனையவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி இருக்கிறார். ஆனால், பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டதும், சமஸ்கிருதத்தைத் திணிக்க மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும், அந்நிய மொழியென ஜெர்மன் பயிற்றுவிக்கப்படுவதை தடை செய்ய முயன்றதும் மோடி அரசின் நோக்கத்தை வெளிப்படுத்தின.
இந்துத்துவா சக்திகள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சமஸ்கிருத மொழி, இந்தி மொழியை திணிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது கண்டனத்திற்குரியது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் மும்மொழிப் பாடத்திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை புகுத்தி, சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்க மத்திய அரசு முனையக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.