சிங்கள அரசுக்காக எங்களை பலியிட்டால் உறவு அறுந்துபோகும்! - மோடிக்கு வைகோ எச்சரிக்கை
சென்னை: சிங்கள அரசோடு உறவை வளர்த்துக்கொள்ள எங்களை பலியிட்டால், எங்கள் உறவு அறுந்து போகும் ஆபத்து ஏற்படும் என வைகோ மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கையில் விதிக் கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை கண்டித்தும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பால் விலை உயர்வை கண்டித்தும் ம.தி.மு.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசியதாவது:
ராஜபக்சேவின் உத்தரவின் பேரில், அங்கு இருக்கும் ஐகோர்ட்டு தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.
5 பேரும் எல்லை தாண்டி வந்தார்கள் என்று கைது செய்து, போதைப்பொருள் கடத்தினார்கள் என்று பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. தமிழக மற்றும் மத்திய உளவுத்துறைகள் அவர்கள் போதைப்பொருள் கடத்தவில்லை என்று தெரிவித்தன.
அப்படி என்றால் இந்த அப்பாவிகள் 5 பேரின் தூக்கு தண்டனை விதிப்பதற்கு மத்திய அரசு கொடுத்த தைரியம் தான் காரணம். உங்கள் அரசு மலரும், நீதி கிடைக்கும் என்று நினைத்தேன்... தலையில் கல்லை போட்டு விட்டீர்களே?
இந்த விஷயத்தில் தமிழகம் முழுவதும் கொந்தளித்துள்ளதே? மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் வேதனைப்படுகின்றனரே? இத்தனைக்குப் பிறகும் அந்த அரசுக்கு உணர்த்தும் வகையில் ஏதாவது செயல்பட்டீர்களா?
இந்த கால கட்டத்திலும், 3 நாட்களுக்கு முன், இந்திய ராணுவத்தை இலங்கைக்கு பயிற்சிக்கு அனுப்பி உள்ளீர்கள். அங்கு சென்ற ராணுவ செயலாளர் மாத்தூர் கூறுகிறார், "இந்திய ராணுவம், உங்கள் ராணுவத்திடம் இருந்து நிறைய கற்க வேண்டும்" என்கிறார்.
இசைப் பிரியாக்களை கற்பழிக்கவா? பச்சிளம் குழந்தைகளை கொன்று குவிப்பதற்காகவா? மருத்துவமனைகளில் குண்டுமழை பொழியவா? குடும்பம் குடும்பமாக குண்டுவீசி கொலை செய்வதற்காகவா? இலங்கை ராணுவத்திடம் இந்திய ராணுவம் பயிற்சி எடுக்க வேண்டும்.
எங்கள் உறவு அறுந்துபோகும்
சீனாவை, பாகிஸ்தானைக் காரணம் காட்டி, எங்கள் மக்களுடனான உறவில் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால், ராஜபக்சே சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும்தான் துணை போவார். சீனா அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலைக் கொண்டு விட்டிருக்கிறார். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், எங்கள் மக்கள்தானே பாதிக்கப்படுவார்கள்.
இத்தனைக்கு பிறகும், சிங்கள அரசோடு உறவை வளர்த்துக்கொள்ள நினைக்கின்ற மோடி அரசுக்கு சொல்கிறேன். சிங்கள அரசோடு உறவை வளர்த்துக்கொள்ள எங்களை பலியிட்டால், எங்கள் உறவு அறுந்து போகும்," என்றார்.