விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய டிவி சேனல் ''வெளிச்சம்'' செய்தி.. ஏப்ரல் -14 முதல்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வ 24 மணிநேர டிவியான வெளிச்சம் சேனல் ஒளிபரப்பு ஏப்ரல் 14-ந் தேதி முதல் தொடங்குகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்படும் என்று கடந்த ஆண்டு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்து இருந்தார். கடந்த பொங்கல் திருநாளில் இதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால் சேனல் ஒளிபரப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘வெளிச்சம்' என்ற செய்தி தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது. அம்பேத்கர் பிறந்தநாளில் இதனை திறக்க தொல்.திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்பது நீண்ட கால திட்டம். அது இப்போது நிறைவேறி உள்ளது. மருதம் டெலிவிஷன் நெட் ஒர்க்- விடுதலை சிறுத்தையின் செய்தி நிறுவனமாகும். அதன் சார்பில் வெளிச்சம் தொலைக்காட்சி தொடங்குகிறோம்.
இதன் தொடக்கவிழா அம்பேத்கர் பிறந்த நாளான 14-ந்தேதி நடைபெறுகிறது. சென்னை அசோக்நகர் 100 அடிசாலையில் உள்ள அலுவலகத்தில் இது இயங்கும். தொடக்க விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுத்து இருக்கிறேன்.
வெளிச்சம் செய்தி தொலைக்காட்சியில் கட்சி சார்பற்று அனைத்து தரப்பு செய்திகளும் இடம் பெறும். குறிப்பிட்ட கட்சிகளுக்காக மட்டும் இருக்காது. நீண்ட காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொலைக்காட்சி நிறுவப்பட வேண்டும் என்ற எண்ணம் இப்போது நிறைவேறியுள்ளது என்றார்.
மக்கள் நலக் கூட்டணிக்கு 2 டிவி!
இந்த டிவியையும் சேர்த்தால் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணிக்கு 2 செய்தி சானல்கள் கிடைத்து விடும். ஏற்கனவே தேமுதிகவிடம் கேப்டன் செய்திகள் சானல் உள்ளது நினைவிருக்கலாம்.