தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனைக்கு கடும் எதிர்ப்பு- திரும்பப் பெற வலியுறுத்தி விசிக தீர்மானம்
சென்னை: தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனை செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. கங்கை நீர் விற்பனையைத் திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் செயற்குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு கங்கை நீரை தபால் நிலையங்களில் விற்பனை செய்ய அனுமதித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மதச்சார்பற்ற அரசு என்பதை கேவலப்படுத்தும் விதமாக மத்திய அரசு நடந்து கொள்வதாக திமுக தலைவர் கருணாநிதி சாடியிருந்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்துக்கு அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையி வகித்தார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நைஸ் தாக்குதலுக்கு கண்டனம்
15.07.2016 அன்று பிரான்ஸ் நாட்டில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு விசிக மாநில செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது, அதில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலியையும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.
காஷ்மீர் ராணுவத் தாக்குதல்...
2016 ஜூலை மாதம் இரண்டாவது வாரம் தொடங்கி காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மீது தொடரும் ராணுவத் தாக்குதலுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் நடைமுறையிலுள்ள ஆயுதப் படைகள் சிறப்பு சட்டத்தை (AFSPA) உடனே ரத்துசெய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
கங்கை நீர் விற்பனைக்கு எதிர்ப்பு
மதச்சார்பின்மைக்குக் கேடு விளைவிக்கும் வகையில் தபால் அலுவலகங்கள் மூலம் கங்கை நீர் விற்பதைக் கண்டிப்பதோடு அதை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு மத்தியில் ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறது.
சமஸ்கிருத திணிப்பு
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சமஸ்கிருதத் திணிப்புக்கும், கல்வி மற்றும் பண்பாட்டு அமைப்புகளை காவிமயப்படுத்துவதற்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறதுஸ்மிருதி இரானி அமைச்சராக இருந்தபோது பிறப்பிக்கப்பட்ட மதச்சார்பின்மைக்கு எதிரான உத்தரவுகளை ரத்து செய்யுமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
அனைத்து கட்சி குழு
தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலை நிறுத்துவதற்கு தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதுவது மட்டும் போதாது; இதற்காக அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை டெல்லிக்கு அனுப்பிப் பிரதமரை வலியுறுத்தச் செய்யவேண்டுமென செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தமிழர் நிலத்தை விடுவிக்க வேண்டும்
யாழ்ப்பாணத்தில் சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பிரதேசமான வலிகாமம் வடக்குப் பகுதியில் ஆக்கிரமித்த நிலத்தைச் சுற்றி ராணுவம் வேலி எழுப்பிவருகிறது. சம்பூர் பகுதியிலும் இதே போல தமிழருக்குச் சொந்தமான நிலங்கள் தொடர்ந்து ராணுவ ஆக்கிரமிப்பிலேயே உள்ளன. இலங்கைப் பேரினவாத அரசின் இந்தத் தமிழர் விரோத நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் ராணுவ ஆக்கிரமிப்பிலிருக்கும் தமிழர் நிலங்கள் அனைத்தையும் மீள ஒப்படைக்க வேண்டுமென்றும் இலங்கை அரசை இந்தியா வலியுறுத்தவேண்டுமென்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது.
உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு
சென்னை உயர் நீதிமன்றப் பரிந்துரையின்படி உள்ளாட்சி அமைப்புகளின் துணைத்தலைவர் பொறுப்புகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது. உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் தலைவர் பொறுப்புக்கு நேரடித் தேர்தல் முறையைக் கொண்டுவரவேண்டும், முழுமையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
பஞ்சாயத்து எழுத்தர் பதவியை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்கு 2013ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 72ஐ நடைமுறைப்படுத்துமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது. தமிழக அரசின் மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் இடஒதுக்கீட்டுக்குப் புறம்பாக செய்யப்படும் நேரடி நியமனங்களைக் கைவிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
கூலிப்படை கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி
ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, சங்கிலிப் பறிப்பு எனச் சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம்-ஒழுங்கு நிலையை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலிப்படை கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறது.
ஆணவக் கொலைகளை தடுக்க...
ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதி ராமசுப்ரமணியன் வழங்கிய பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும், அதற்காக சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமெனவும் தமிழக அரசை செயற்குழு வலியுறுத்துகிறது.
ஆந்திராவுக்கு கண்டனம்
தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளைப் பறிக்கும்வகையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டும் ஆந்திர அரசை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த அநீதியைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு மேலும் முனைப்போடு செயல்படுமாறு வலியுறுத்துகிறது.
தலித்துகளுக்கு துரோகம்
மத்தியில் ஆளும் பாஜக அரசு அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக உள்ள மதச்சார்பின்மைத் தத்துவத்தை அழிக்கும்வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மதச் சிறுபான்மையினருக்கு எதிராகவும் தலித் மக்களுக்கு எதிராகவும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் மேற்கொண்டுவரும் வெறுப்புப் பிரச்சாரத்தை ஊக்குவித்து, கட்டமைப்புரீதியான வன்முறை அதிகரிப்பதற்கு ஆதரவளித்து வருகிறது. பட்ஜெட்டில் தலித் மக்களின் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைத்தும், SCSP/ TSP முதலான திட்டங்களை ரத்துசெய்தும் மிகப்பெரும் துரோகத்தை இழைத்துவருகிறது; சட்டத்துக்குப் புறம்பான வழிமுறைகளைக் கையாண்டு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை முடக்க முயற்சிக்கிறது.
ஓரணியில் மதச்சார்பற்ற சக்திகள்
இந்திய நாட்டின் மதச்சார்பற்ற கொள்கையை அழிக்க முற்படும் மத்திய அரசின் போக்கைக் கண்டிக்காததோடு அந்த அரசுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஆதரவளிப்பதன்மூலம் தமிழ்நாட்டை ஆளும் அதிமுகவானது பாஜகவின் கூட்டாளியாகச் செயல்பட்டுவருகிறது. இது தமிழ்நாட்டில் மெள்ள மெள்ள இந்துத்துவ சக்திகள் வலுப்பெற ஊக்கமளிக்கிறது. இந்நிலையில், அம்பேத்கர், பெரியார், காமராசர் வழியில் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்கவேண்டிய வரலாற்றுக் கடமையை செயற்குழு உணர்கிறது. அத்தகையதொரு பரந்த அணிசேர்க்கையை உருவாக்குவதற்கான உத்திகளை வகுத்துச் செயல்படுத்திட உறுதியேற்கிறது.