தீவிரமான பருவமழை... வரத்து குறைவால் ஆப்பிளைவிட கத்தரிக்காய் விலை அதிகம்!!
தூத்துக்குடி: பருவமழை தீவிரமடைந்து வருவதால் காய்கறி வரத்துகள் கணிசமாக குறைந்துபோய்விட்டன. இதனால் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதில் கத்தரிக்காய் விலை ஆப்பிளை விட கூடுதலாக விற்கப்படுவதால் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர், முடுக்குமீட்டான்பட்டி, இடைசேவல், கயத்தாறு,கழுகுமலை, கடலையூர், மூப்பன்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் மானாவரி பயிர் மட்டுமின்றி காய்கறிகளையும் பயிர் செய்து வருகின்றனர். இங்கு விளையும் காய்கறிகள் கோவில்பட்டி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நிலங்களில் நீர்பிடிப்பு அதிகம் உள்ளது. இந்த ஈரப்பதம் நன்றாக காயும்போதுதான் காய்கறி செடிகள் நன்றாக காய்க்கும். தொடர்மழையால் நீர் வடியாமல் இருப்பதால் செடிகளில் பூக்கள் வாடி வருகின்றன. இதனால் காய்கறி விளைச்சல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி சந்தைக்கு தற்போது மிகவும் குறைந்த அளவுதான் காய்கறிகள் வருகின்றன. இதனால் இவற்றின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன. ஒரு கிலோ கத்தரிக்காய் விலை மழைக்கு முன்பாக ரூ.30 முதல் ரூ.40 வரை மட்டுமே விற்கப்பட்டது. தற்போது அது ரூ.100க்கு விற்கப்படுகிறது. இது போல் வெண்டைக்காய், தக்காளி, மிளகாய், பூசணிக்காய், சீனி அவரைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையும் உயர்ந்துவிட்டது.
என்னதான் விலை உயர்ந்தாலும் வாங்கிச் செல்ல வேண்டிய நெருக்கடியில் பொதுமக்கள் தவியாய் தவிக்கின்றனர்....