எங்கு போட்டியிடுவது?... இதிலும் விஜயகாந்த்துக்குக் குழப்பமாமே!
சென்னை: எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பதிலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குப் பெரும் குழப்பமாக உள்ளதாம். இதனால் அவர் போட்டியிடும் தொகுதியை கடைசியில் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது தேமுதிக.
பெரிய பெரிய கட்சிகளே ஒரே கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு முடித்து விட்ட நிலையில் வெறும் 104 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் தேமுதிக பார்ட் பார்ட்டாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. பலர் போட்டியிட முன்வராததால் வேட்பாளர்களை மொத்தமாக முடிவு செய்ய முடியாத நிலை உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுவரை 5 கட்டமாக வேட்பாளர் பட்டியலை தேமுதிக அறிவித்துள்ளது. இதில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியை இன்னும் அறிவிக்காமல் உள்ளனர்.
ஆனானப்பட்ட கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின்
ஆனானனப்பட்ட கருணாநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் தொகுதிகளை அறிவிக்கப்பட்டு அவர்கள் களத்திலும் குதித்து விட்டனர். ஆனால் விஜயகாந்த் தொகுதியை அறிவிக்க முடியாமல் திணறி வருகிறது தேமுதிக.
ரிஷிவந்தியமா?
முதலில் ரிஷிவந்தியம் தொகுதியிலேயே அவரை மீண்டும் போட்டியிட வைக்கலாம் என்று யோசிக்கப்பட்டதாம். ஆனால் அங்கு தற்போது சாதகமான நிலை இருக்கிறதா என்ற சந்தேகம் வந்துள்ளதால் அந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.
உளுந்தூர்ப்பேட்டையா?
இதையடுத்து உளுந்தூர்ப்பேட்டை சரியாக இருக்கும் என்று கூறப்படவே அந்தத் தொகுதியை கிட்டத்தட்ட இறுதி செய்து விட்டனராம். ஆனால் தற்போது அங்கு திமுக போட்டியிடுவதால் (ம.ம.க. தொகுதியை சரண்டர் செய்து விட்டதால்) விஜயகாந்த் தரப்புக்கு ஜெர்க் ஆகியுள்ளதாம்.
விழுப்புரமா?
அதேபோல விழுப்புரம் தொகுதியில் அவர் போடடியிடலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. ஆனால் அது முடிவாகவில்லையாம். இதேபோல மேலும் சில தொகுதிகளையும் அலசி வருகிறார்களாம்.
இன்னும் 11 தொகுதிகள் பாக்கி
தற்போது தேமுதிகவில் 93 வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். இன்னும் 11 தொகுதிகள் மட்டுமே பாக்கி. அதில் ஒன்றில்தான் விஜயகாந்த் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
சொல்ல முடியாது
ஆனால் தேமுதிகவை நம்பி உறுதியாக எதையும் பேசவும் முடியாது. கடைசி நேரத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு தொகுதியில் இவரது பெயரை அறிவித்து மற்ற கட்சிகளுக்கு ஷாக் கொடுத்தாலும் கொடுக்கலாம்.