சீனியர்கள் பிளஸ் ஜூனியர்.. அதிமுகவின் விழுப்புரம் மாவட்ட வேட்பாளர்களின் பயோடேட்டா
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அதிமுக வேட்பாளர்களாக சீனியர்களான சி.வி.சண்முகம், கோதண்டராமன், குமரகுரு ஆகியோரும் 32 வயதான இளைஞர் பிரபும் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்பு:
சி.வி.சண்முகம்:
விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளராக மீண்டும் சி.வி.சண்முகம் (50) அறிவிக்கப்பட்டுள்ளார். 2001-ல் திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகவும், வணிகவரி மற்றும் கல்வி அமைச்சராக இருந்தார். தொடர்ந்து 2006-லும், வெற்றி பெற்று திண்டிவனம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். 2011-ல் விழுப்புரம் தொகுதியில், திமுகவைச் சேர்ந்த பொன்முடியை வீழ்த்தி எம்எல்ஏவாக தொடர்கிறார். மீண்டும் விழுப்புரம் தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார் சி.வி.சண்முகம்
ராஜேந்திரன்:
திண்டிவனம் தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜேந்திரன் (63) கல்லூரி மாணவர் பருவத்திலிருந்து கட்சிப்பணி ஆற்றி வருகிறார். 1991 ஆம் ஆண்டு ஒலக்கூர் ஒன்றியக் குழுத்தலைவராக பதவி வகித்தவர். 1996 ஆம் ஆண்டு வானூர் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். தற்போது திண்டிவனம் (தனி) தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சக்ரபாபாணி:
வானூர் தனி தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சக்கராபாணி (60) எம்ஏ பட்டதாரி. எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றியச் செயலாளர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். விவசாயத் தொழில் செய்து வரும் இவர் வானூர் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.
வேலு:
விக்கிரவாண்டி தொகுதிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர். வேலு (60) 9 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். விக்கிரவாண்டி ஒன்றிய செயலளாராக பதவி வகித்தவர். இவரது மனைவி அலமேலு மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்து வருகிறார்.
கோ.கோதண்டராமன்:
திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சேவல் கோ.கோதண்டராமன் (66) 1980 ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக இருந்து வருகிறார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2001 ஆம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது முகையூர் ஒன்றியச் செயலராக இருந்து வருகிறார். 3- வது முறையாக இதே தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் கோ.கோதண்டராமன்.
சங்கராபுரம் -பா.மோகன்
ப. மோகன் அதிமுக கட்சி தொடங்கியதிலிருந்து அதன் உறுப்பினராக உள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். 1996, 2006ம் ஆண்டுகளில் சின்னசேலத்தில் போட்டியிட்டு தோற்றார். 2001ம் ஆண்டு சின்னசேலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக இருந்துள்ளார்.
2003ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை இவர் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும், பின்னர் கூட்டுறவு மற்றும் வனத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
சங்கராபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றி பெற்றார். 2012 அக்டோபர் அன்று ஊரகத் தொழில்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
கதிர்.தண்டாபாணி:
ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கதிர்.தண்டாபாணி (51) வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். கட்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.
அண்ணாதுரை:
மயிலம் சட்டசபை தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அண்ணாதுரை (49) வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். மாவட்ட கவுன்சிலர், 2 முறை ஒன்றிய செயலர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார், தற்போது வல்லம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவராக இருந்து வருகிறார் அண்ணாதுரை.
அ.கோவிந்தசாமி:
செஞ்சி சட்டசபை தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அ.கோவிந்தசாமி (60) அறிவிக்கப்பட்டுள்ளார். வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். செஞ்சி ஒன்றிய செயலாளராக பதவி வகித்தவர். தற்போது சட்டசபை வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
பிரபு:
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் புதுமுகம் பிரபு (32). 1999 ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக இருந்து வருகிறார். ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். தற்போது தியாகதுருகம் ஒன்றிய இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர், இயக்குநர் விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு அச்சகம், பெரியமாம்பட்டு கூட்டுறவு கடன் சங்க இயக்குநராக உள்ளார். ஏற்கனவே சட்டப் பேரவை தேர்தலுக்கு பணம் கட்டியவர். தற்போது முதல் முறையாக களமிறங்கியுள்ளார் பிரபு.
குமரகுரு:
உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குமரகுரு: உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குமரகுரு (55). பி.யூ.சி. படித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தற்போது இதே தொகுதியில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார் குமரகுரு.