விஷ்ணுப்பிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: கடலூரில் திமுக சாலை மறியல்
கடலூர்: தற்கொலை செய்துகொண்ட திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி அவரது சொந்த ஊரான கடலூரில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படும் நேரத்தில் திமுகவினர் சாலைமறியல் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக கடந்த 7 மாதமாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுப்பிரியா 27. வெள்ளிக்கிழமையன்று அவரது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த விஷ்ணுப் பிரியாவின் தற்கொலைக்கு உயரதிகாரிகள் டார்ச்சர் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
காவல்துறையினரிடையே மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விஷ்ணுப்பிரியாவின் மரணம் குறித்து மாவட்ட எஸ்.பி செந்தில் குமார் உத்தரவின் பேரில் ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடத்திவந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக அரசு நேற்று மாலை உத்தரவிட்டது. உடனடியாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். பணியில் இருந்த போலீசாரிடமும் விசாரணை நடத்தப்படப்பட்டது. உயர் அதிகாரிகளிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று விஷ்ணு பிரியாவின் பெற்றோரும், பல்வேறு அரசியல் கட்சியனரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே சொந்தவூரான கடலூரை அடுத்த கோண்டூருக்கு கொண்டுசெல்லப்பட்டு விஷ்ணுப்பிரியா உடலை பார்த்த உறவினர்கள் நண்பர்கள் கதறி அழுதனர். விஷ்ணுப்பிரியாவின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்ய எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த நிலையில் விஷ்ணுப்பிரியாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி அவரது சொந்த ஊரான கடலூரில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றனர். இதனையடுத்து அங்கு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.