சென்னை பள்ளிகளில் விவேகானந்தர் ரதம்... கலை, கலாசார நிகழ்ச்சியுடன் கோலாகலம்
சென்னை: இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியின் நடைபெறவிருப்பதையொட்டி சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. மாணவர்கள் பலர் விவேகானந்தர் போல தோற்றத்தில் கலந்து கொண்டனர்.
மாணவர்களிடம் நற்குணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விவேகானந்தர் ரதயாத்திரை சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைக்கப்பட்டது. வருகிற ஆகஸ்ட் 4-ந் தேதி வரை ஆயிரம் பள்ளிகளுக்கு இந்த ரதங்கள் செல்கின்றன.
பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை சார்பில் 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் நடைபெறவிருக்கிறது. இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஆகஸ்ட் 2-ல் கண்காட்சி தொடக்கம்
மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி இந்த கண்காட்சி தொடங்குகிறது. இதில் சுமார் 350 இந்து ஆன்மிக அமைப்புகள் கலந்துகொள்ள உள்ளன. கண்காட்சியை 2-ந் தேதி மாலை 4 மணிக்கு யோகா குரு பாபா ராம்தேவ் தொடங்கி வைக்கிறார்.
துறவிகள் பங்கேற்பு
ஆகஸ்ட் 8-ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. இதில் சீக்கிய, புத்த, ஜைன மதங்களின் முக்கிய துறவிகளும் பங்கேற்க உள்ளனர்.
பள்ளிகளுக்கு....
அதன் முன்னோட்டமாக சுவாமி விவேகானந்தர் ரதயாத்திரையின் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. 25 ரதங்கள் விவேகானந்தரின் சிலைகளை தாங்கி ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனவாம்.
விவேகானந்தர்கள்....
இந்நிலையில், சென்னையில் உள்ள பள்ளிக்கு விவேகானந்தர் ரதயாத்திரை சென்றது. அப்போது மாணவர்கள் தாங்களும் விவேகானந்தர் போல உடையணிந்து, விவேகானந்தர் போன்ற தோற்றத்தில் வந்து நின்றனர். மேலும் ரதத்தில் இருந்த விவேகானந்தர் உருவ சிலைக்கு, மாலை அணிவித்தனர்.
1000க்கும் அதிகமான பள்ளிகளுக்கு...
கலை, கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என விவேகானந்தருக்கு மலர் தூவி வழிபாடு செய்தனர். 25 ரதங்களும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றன.