கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து நீர் திறப்பு
செங்கோட்டை: அடவி நயினார் கோவில் நீர்தேக்கத்தில் இருந்து கார் சாகுபடிக்காக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா மேக்கரை கிராமத்தில் 136அடி உயரத்தில் அமைந்துள்ளது அடவிநயினார் கோவில் நீர்தேக்கம். இந்த அணை மூலம் வடகரை கீழ் பிடாகை, பண்பொழி, குத்துக்கல் வலசை, அச்சன் புதூர், நையினாகரம், ஆய்க்குடி, இலத்தூர், கொடிக்குறிச்சி, நெடுவயல், கிளங்காடு, வடகரை மேல்பிடாகை உள்ளிட்ட கிராமங்கள் பயன் அடைந்து வருகின்றன.
கார்சாகுபடிக்காக நேரடி பாசன வசதி பெறும் கரிசல்கால், வல்லாக்கால், இலத்தூர் கால், நயினாகரம் கால், கிளங்ககாடு, கம்பிளிகால் மற்றும் புங்கன் கால் ஆகியவற்றின் 2,147.47ஏக்கர் நிலம் பயனடைய இன்று தமிழக முதல்வர் உத்தரவுப்படி நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கருணாகரன் இந்த அணையிலிருந்து தண்ணீரை திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி எம்.பி. வசந்தி முருகேசன், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. துரையப்பா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
65 நாட்களுக்கு கார்சாகுபடிக்காக அடவிநயினார் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.