தனியார் குடிநீர் லாரிகள் ஸ்டிரைக்- தென் சென்னை அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் அவதி
சென்னையில் 1200 தனியார் குடிநீர் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தென்சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாய கிணற்றுகளில் இருந்து குடிநீர் எடுக்கும் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1,200 குடிநீர் லாரிகள் 3 நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தென்சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை புறநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர விடுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொன்மார், மாம்பாக்கம், மேடவாக்கம், கோவிலம்பாக்கம் போன்ற பகுதிகளில் விவசாய கிணற்று நீரை, தனியார் லாரிகளில் கொண்டு வந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
விவசாய கிணற்றுகளில் இருந்து தண்ணீரை உரிய அனுமதியின்றி வணிக ரீதியில் விற்பனை செய்ய எடுத்துச் செல்வதாக கூறி செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர், திருப்போரூர் வட்டாட்சியர் ஆகியோர் லாரி டிரைவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்சென்னை தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தித்தினர் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வறட்சியால் தண்ணீர் பிரச்சினை
சென்னையில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மெட்ரோ தண்ணீர் சப்ளை பல பகுதிகளில் நிறுத்தப்பட்டு விட்டது. லாரி தண்ணீர் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் பலமுறை போன் செய்தால் மட்டுமே எப்போதாவது ஒரு தண்ணீர் லாரி வந்து தண்ணீரை சப்ளை செய்யும்.
குடிநீர் லாரிகள்
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான சிறுசேரி, தண்டலம், திருப்போரூர், இன்னலூர், பனங்காடுபாக்கம், ஆலந்தூர், பையனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் இருந்து தனியார் குடிநீர் லாரிகள் மூலம் விதிமுறைகளை மீறி தண்ணீர் எடுக்கப்படுகிறது என்பது புகார்.
வணிக ரீதியான விற்பனை
இந்தக் குடிநீர் மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பழைய மகாபலிபுரம் சாலை, பெருங்குடி போன்ற பகுதிகளில் குடியிருப்புகள், ஐ.டி. நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு விற்கப்படுகின்றன. 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு ரூ.150 முதல் ரூ.200 வரையே கொடுக்கின்றனர். அவற்றை ரூ.4,000 முதல் ரூ.5000 வரை விற்பனை செய்கின்றனர் என்பது புகார்.
லாரிகள் பறிமுதல்
வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நேரத்தில் விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுக்கப்படுவதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சட்ட விரோதமாகத் தண்ணீர் எடுத்த 5 லாரிகளைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை விடுவிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தென்சென்னை தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.
குடிநீர் விநியோகம் பாதிப்பு
இந்தச் சங்கத்துக்குச் சொந்தமான 1,200 லாரிகள் உள்ளன. அந்த லாரிகள் அனைத்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பழைய மகாபலிபுரம் சாலை, பெருங்குடி மற்றும் தென் சென்னையின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் திங்கள்கிழமை முதல் பாதிக்கப்பட்டது. அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் அவதி
குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தென் சென்னை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடிகளில் வசிப்பவர்களின் பாடு படு திண்டாட்டமாகியுள்ளது. தண்ணீர் பிரச்சினை தீரும் வரை சொந்த ஊர் செல்ல முடிவு செய்துள்ளனர். தண்ணீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஹோட்டல்கள் - மருத்துவமனைகள்
குடிநீர் லாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக மருத்துவமனைகளில் நோயாயிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதே போல நட்சத்திர ஹோட்டல்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விரைவில் குடிநீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.