அரசு எப்போது அழைத்தாலும் பேச்சுவார்த்தைக்கு தயார்.. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
அரசு எப்போதும் அழைத்தாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சென்னை: அரசு எப்போதும் அழைத்தாலும் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராக இருப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
ரூ.7000 கோடி நிலுவைத் தொகை கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 3-ஆவது நாளாக இன்று வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் நேற்று பிற்பகலில் பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நலத் துறை ஆணையர் யாசிம் பேகம் 47 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
எனினும் அரசு தரப்பில் இருந்து யாரும் வராததால் பேச்சுவார்த்தையை அவர் ஒத்திவைப்பதாக அறிவித்தார். இந்நிலையில் அரசு அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது.