டிடிவி தினகரன் து.பொ. செயலாளர் இல்லை.. பொதுக்குழு எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுகிறோம்: தம்பிதுரை
அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக தினகரன் இல்லை என்று பொதுக் குழு எடுத்த முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்று தம்பிதுரை கூறியுள்ளார்.
டெல்லி: அதிமுகவின் தலைமை எடுக்கும் முடிவிற்கு நாங்கள் கட்டுப்பட்டு செயல்படுகிறோம் என்று லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
டெல்லியில் லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அதிமுக கட்சியின் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதன்படி செயல்படுவோம். எங்களுக்குள் பிளவு என்பது கிடையாது. நாங்கள் ஒன்றுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
கழகத்தின் பொதுக் குழு என்ன முடிவெடுத்திருக்கிறதோ அதன்படி கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்திலும் என்ன செய்ய வேண்டுமோ அதனை தலைமைக் கழகம் முடிவெடுத்துச் செய்யும்.
கட்சி பிளவு பட்டிருக்கிறது என்பதைத் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும்தான் சொல்ல வேண்டும். மற்றவர் யாரும் சொல்ல உரிமை கிடையாது. கட்சியில் மூன்றில் 2 பங்கு பிரிந்து சென்றால்தான் அது பிளவாகக் கருதப்படும். அப்படி ஒரு பிளவு அதிமுகவில் ஏற்படவில்லை. 3 அணி, 4 அணி என்று ஊடகங்கள்தான் பேசி வருகிறது.
துணைப் பொதுச் செயலாளராக தினகரன் இல்லை என்று கட்சியின் தலைமை முடிவெடுத்துவிட்டது. அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். ஜெயலலிதாவால் யார் நியமிக்கப்பட்டார்களோ அவர்கள் தலைமைக் கழகத்தில் கூடி ஒரு முடிவை எடுத்துள்ளார்கள். தமிழகத்தில் நல்லாட்சித் தொடரும். அடுத்த 4 ஆண்டுகள் மட்டுமல்லாமல் 100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தமிழகத்தில் இருக்கும் என்று தம்பிதுரை கூறினார்.