தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் - தம்பித்துரை
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என லோக்சபா எம்.பியும் துணை சபாநாயகரான தம்பிதுரை கூறியுள்ளார்.
சென்னை: சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கான சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக தம்பித்துரை எம்.பி கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். அவர்கள் 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா 10 கோடியும் அபராதம் விதித்தார்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த தீர்ப்பை ரத்து செய்து நான்கு பேரையும் விடுதலை செய்தார் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமராசாமி. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், குன்ஹா அளித்த தீர்ப்பை ரத்து உறுதி செய்தது. இதனையடுத்து சசிகலாவின் முதல்வர் கனவு கலைந்துள்ளது.
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கான சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதால் . மூவரும் இன்று மாலைக்குள் பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா எம்.பியும் துணை சபாநாயகருமான தம்பித்துரை, அதிமுகவிற்கு ஓ.பன்னீர்செல்வம் துரோகம் இழைத்துவிட்டதாக கூறினார்.
பெரும்பான்மை சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு சசிகலா தரப்புக்கு தான் உள்ளது என்ற அவர், விரைவில் ஆளுநர் தங்களை ஆட்சியமைக்க அழைப்பார் என கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாகவும் கூறினார்.