சென்னையில் பணத்திமிரால் அநியாயமாக பறிக்கப்படும் உயிர்கள்- நிர்கதியாகும் ஏழைகளின் குடும்பங்கள்!
குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், சொகுசு கார்களை கொண்டு அதிவேகமாக கார்களை ஓட்டுதல் உள்ளிட்டவற்றால் ஏற்படும் விபத்துகளுக்கு தீர்வு தான் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை : குடித்து விட்டு வாகனம் ஓட்டும் பண முதலைகளின் வாரிசுகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதோடு பாதிக்க்கப்படும் ஏழைகளின் குடும்பத்தினர் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இளங்கன்று பயமறியாது என்பது பழமொழி. அதற்கேற்ப இளைஞர்கள் சிறிதும் பயமின்றி சகட்டுமேனிக்கு இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.
இதனால் சாலை விபத்துகள் ஏற்படுவதோடு, அவர்கள் எப்படி வருகிறார்கள் என்பதை யூகிக்க முடியாமல் தானாகவும் விபத்து சிக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

தீவிபத்தில் தாயை இழந்தார்
திருத்தணியை அடுத்த அகூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு மயிஷா (7), ரஞ்சனா (5) என்ற மகள்கள். கடந்த ஆண்டு மே மாதம் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி புஷ்பாவும் இளைய மகள் ரஞ்சனாவும் உயிரிழந்தனர். இதனால் மயிஷா தனது பாட்டியின் பராமரிப்பில் உள்ளார்.

மயிலாப்பூரில் விபத்து
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஆறுமுகமும் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு படுத்துள்ளார். அப்போது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விஜய்ஆனந்த் என்பவரின் மகன் விகாஸ் தனது நண்பருடன் மதுபோதையில் கார் ஓட்டி வந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 ஆட்டோக்கள் மீதும் பயங்கரமாக மோதினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆறுமுகம் உயிரிழந்தார். தாயை இழந்த சிறுமி மயிஷா தந்தையையும் இழந்துவிட்டாள்.

அதே மயிலாப்பூரில் மற்றொரு விபத்து
தற்போது மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மயிலாப்பூரில் ஆட்டோக்களை நிறுத்தி விட்டு ஓட்டுநர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டிய லயோலா கல்லூரி மாணவர்கள் ஆட்டோ மீது கடுமையாக மோதினர். இதில் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் உயிரிழந்துவிட்டார். 5 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அபராதம் வசூலும், வழக்குப் பதிவும்
இதுபோன்ற உயிரிழப்புகளை ஏற்படுத்தும் குற்றங்களுக்கு வெறும் அபராதம் விதிப்பது, வழக்குப் பதிவு செய்வது, இழப்பீடு வாங்கித் தருவது ஆகியவற்றை செய்துவிட்டால் போதுமா. அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பம் நடத்துவதே மிகவும் சோதனையாகும். ஆனால் அந்த குடும்பத்தின் தலைவன் இதுபோன்ற பணத்திமிரால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்க நேரிட்டால் அவரது குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிடுகின்றன.

தண்டனைகள் தீவிரம்
மக்களுக்காக போராடுவோரை குண்டர் சட்டத்தில் பிடித்து போடும் அரசு உயிரிழப்புகளை ஏற்படுத்துவோருக்கு ஜாமீன் கொடுக்காமல் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் கடுமையான தண்டனையால் வாகனம் ஓட்டும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இளைஞர்களும் குடித்துவிட்டு தான் அழிவதோடு இதுபோன்று ஏழைகளின் வாழ்க்கையில் விளையாடாமல் சாலை விதிகளை மதித்து வாகனங்களை ஓட்ட வேண்டும்.












Click it and Unblock the Notifications