18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு: 3வது நீதிபதியின் பணி என்ன? தீர்ப்பு எப்போது வெளியாக வாய்ப்பு?
Recommended Video

சென்னை: தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், சென்னை ஹைகோர்ட்டின், 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், 3வது நீதிபதியிடம் வழக்கு சென்றுள்ளது.
3வது நீதிபதி யார் என்பதை சென்னை ஹைகோர்ட்டில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு அடுத்ததாக மிகவும் சீனியர் நீதிபதியாக உள்ள, குலுவாடி ஜி.ரமேஷ், தேர்ந்தெடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3வது நீதிபதியை தேர்ந்தெடுக்கும் பணியில், இருந்து இந்திரா பானர்ஜி தானே முன்வந்து விலகிக்கொண்டு, அந்த பொறுப்பை நீதிபதி, குலுவாடி ஜி.ரமேஷுக்கு வழங்கியுள்ளார்.

ஒரு நீதிபதி அமர்வு
3வது நீதிபதி என்பது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கிடையாது. இது ஒரே ஒரு நீதிபதியால் விசாரிக்கப்படும் அமர்வுதான். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தமிழக சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என கூறி, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை செல்லும் என தீர்ப்பு வழங்கினார். மற்றொரு நீதிபதி சுந்தரோ, சபாநாயகர் உத்தரவில் ஹைகோர்ட் தலையிடலாம் என கூறியதோடு, சபாநாயகர் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.

ஆய்வு செய்வார்
இவ்விரு நீதிபதிகளின் தீர்ப்பில் எது சரியானது என்பதை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கும் பொறுப்புதான் 3வது நீதிபதிக்கு செல்கிறது. அவர் மீண்டும் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தாமல், தீர்ப்புகளை மட்டுமே ஆய்வு செய்து தனது தீர்ப்பை வெளியிடலாம். தேவைப்பட்டால், விசாரணையும் நடத்தலாம்.

ஒரு மாதம் போதும்
புதிதாக முதலில் இருந்து விசாரணை நடத்தாமல், இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கினால், அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம். ஆனாலும், இதில் கால நிர்ணயம் எதுவும் கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும்.

தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கான வாய்ப்பு
இந்த விசாரணை காலகட்டத்தில், நீதிமன்றத்தில் அனுமதிகேட்டு சட்டசபைக்கு செல்ல 18 எம்எல்ஏக்களும் கூட முயற்சி செய்யலாம். அதை ஹைகோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications