ஜெ. இல்லத்தை நினைவகமாக மாற்ற முதல்வர் உத்தரவிடுவாரா?
ஜெயலலிதா இறந்து 7மாதம் ஆகியும் அவரின் சொத்துக்களுக்கு யார் வாரிசு என்ற குழப்பம் நீடிக்கிறது.இதனால் மீண்டும் அதிமுக களம் பரபரப்பினை அடைந்துள்ளது. இந்த நிலையில் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லம்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அ.தி.மு.க. தொண்டர்கள் மீண்டும் எழுப்பியுள்ளனர்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது போயஸ் கார்டன் இல்லம் எப்போதும் பரபரப்பாகவே காட்சி அளிக்கும். அவர் ஆட்சியில் இருந்த போதும் சரி, இல்லாத போதும் சரி, போயஸ் கார்டன் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் போயஸ் கார்டன் வீட்டிலேயே வசித்து வந்தார். ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர், சசிகலா அதிரடியாக அ.தி.மு.கவின் பொது ச்செயலாளரானார். அதன் பின்னர் தமிழக முதல்வர் நாற்காலிக்கு குறி வைத்த சசிகலாவை, நிலுவையில் இருந்த சொத்து குவிப்பு வழக்கு தண்டனை சிறையில் தள்ளியது.
ஜெயலலிதாவுக்கு பின்னர் அவரின் வழியில் அரசியலில் காலடி எடுத்து வைத்த சசிகலா போயஸ் கார்டனில் இருந்தே அனைத்து பணிகளையும் மேற்கொண்டார். கட்சி நிர்வாகிகளும் எப்போதும் போல போயஸ் கார்டனில் குவிந்தனர்.
ஜெ.வீட்டுக்கு செல்வதை நிறுத்திய தினகரன்
சசிகலாவுக்கு பின்னர் தினகரனும், தீபக்கும் போயஸ் கார்டனுக்கு அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்தனர். ஆனால் தினகரன் திடீரென கார்டனுக்கு செல்வதை நிறுத்திக் கொண்டார்.
தீபக்கிடம் ஜெ.உயில்
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, தனக்கு பிறகு தனது சொத்துக்கள் யாருக்கு சொந்தம்? என்பது பற்றி வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீபக், ஜெயலலிதா எழுதிய உயில் என்னிடம் உள்ளது. எனக்கும், தீபாவுக்கும் மட்டுமே போயஸ் கார்டன் வீடு சொந்தம் என்று அறிவித்தார்.
விலகி இருக்கும் தீபா
ஆனால் அது தொடர்பாக தீபாவுக்கு வெளிப்படையான எந்த அழைப்பையும் அவர் விடுக்கவில்லை. தீபக், சசிகலா குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்த போதிலும், தீபாவோ அவர்களுடன் சேராமல் விலகியே இருந்தார்.
மோதலில் முடிந்த போன் அழைப்பு
இந்த நிலையில்தான் தீபக் நேற்று திடீரென தீபாவுக்கு போன் செய்து போயஸ் கார்டன் வருமாறு அழைப்பு விடுத்து அது மோதலில் முடிந்துள்ளது. ஜெயலலிதாவின் வாரிசுகள் என்ற அடிப்படையில் தீபா, தீபக் ஆகியோருக்கே போயஸ் கார்டன் இல்லம் சொந்தம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் போயஸ் கார்டன் இல்லம் தற்போது தனியார் பாதுகாவலர்கள் என்ற பெயரில் உள்ள சசி அடியாட்கள் பிடியில் உள்ளது.
தீபாவிடமும் ஜெ. உயில்
இதன் காரணமாகவே தீபாவால் அங்கு எளிதில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. போயஸ்கார்டன் இல்லம் எனக்கு சொந்தம் என்று கூறும் தீபா அது தொடர்பான உயிலும் தன்னிடம் இருப்பதாகவே தற்போது கூறி உள்ளார்.
நீதிமன்றம் செல்லும் தீபா
ஜெயலலிதாவின் சொத்துக்களையும் அ.தி.மு.க.வையும் மீட்காமல் ஓயப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் எந்த நேரத்திலும் தீபா, மீண்டும் போயஸ் கார்டன் விவகாரத்தை கையில் எடுப்பார், அதற்காக நீதிமன்றம் செல்லவும் அவர் தயாராகி வருகிறார் .
ஜெயலலிதா நினைவு இல்லம்
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. அ.தி.மு.க. தொண்டர்கள் இது தொடர்பாக ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ளனர்.
முதல்வர் அறிவிப்பு எப்போது
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, ஜெ. இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று அறிவித்தார். தற்போது போயஸ் கார்டன் இல்ல விவகாரம் பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில் நினைவு இல்லமாக போயஸ் கார்டன் வீட்டை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.