சசி குடும்பத்துக்கு உண்மையிலேயே நம்பிக்கை துரோகம் செய்தது யார்? ஓபிஎஸா ? எடப்பாடியா?
சசிகலாவின் குடும்பத்துக்கு உண்மையிலேயே நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: சசிகலாவின் குடும்பத்துக்கு உண்மையிலேயே நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. ஓபிஎஸ் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக கூறிய சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்தார். ஆனால் எடப்பாடி தரப்போ தற்போது சசி குடும்பத்தை ஓரம் கட்டி விட்டது.
தமிழக முதல்வர், அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணமடைந்த 30 நாட்களுக்குள்ளாகவே தன்னை அக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்துக்கொண்டார் சசிகலா.
நடை உடை பாவனை என அனைத்திலும் ஜெயலலிதாவைக் காப்பியடித்த சசிகலா ஆட்சிக் கட்டிலில் அமரவும் ஆசைப்பட்டார். இதைத்தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்களை வளைத்து சட்டசபை தலைவராக தேர்வாகிக் கொண்டார்.
தியானத்தால் வந்த திருப்பங்கள்
அப்போதைய முதல்வர் ஓபிஎஸிடம் இருந்து ராஜினாமா கடிதமும் வாங்கப்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையை இழந்த ஓபிஎஸ் திடீரென போய் ஜெ நினைவிடத்தில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.
சசிகலா குடும்பத்தினர் மீது புகார்
தியானத்திற்குபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன்னை மிரட்டி சசிகலா குடும்பத்தினர் ராஜினாமா கடிதம் வாங்கியதாக கூறினார். மேலும் பல்வேறு பரபர குற்றச்சாட்டுகளை சசிகலா குடும்பத்தினர் மீது அவர் கூறினார்.
ஓபிஎஸ் நம்பிக்கை துரோகம்?
இதனால் கொதித்துப்போன சசிகலா தரப்பு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியது. இதையடுத்து முதல்வராகியே தீர வேண்டும் என்ற சசிகலாவின் ஆசையில் லோடு லோடாக மண்ணைக் கொட்டியது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
நம்பிக்கைக்குரிய எடப்பாடி
4 ஆண்டு சிறைவாசம் உறுதியானதால் தான் திரும்பி வரும் வரை ஆட்சியை பாதுகாக்கும் நம்பிக்கைக்குரிய அடிமையை தேடினார் சசிகலா. குடும்ப உறுப்பினர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் விவகாரம் பூதாகரமாகிவிடும் என்பதால் எடப்பாடியை முதல்வராக தேர்வு செய்தார் சசி.
தூக்கியடித்த எடப்பாடி
பல்வேறு கூவத்தூர் கூத்துக்களுக்கிடையே முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி ஒரு கட்டத்தில் சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனையே எதிர்க்க ஆரம்பித்தார். இந்நிலையில் முதல்வராக 100 நாட்களை கடந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது தலைமையிலான அமைச்சர்கள் டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளனர்.
நம்பிக்கையை காப்பாற்றினாரா?
சசிகலாவால் நியமிக்கப்பட்ட முதல்வரும் அமைச்சர்களும் இப்படி அறிவித்திருப்பது நிச்சயம் சசிகலாவுக்கு பேரிடியாக இருந்திருக்கும். ஓபிஎஸ் நம்பிக்கை துரோகம் செய்ததாக எடப்பாடிக்கு முதல்வர் பதவியை கொடுத்த சசிகலா, சிறை வாசம் முடிந்து ஊர் திரும்பும் வரை தனது நம்பிக்கையை காப்பாற்றுவார் என எதிர்பார்த்தார்.
வேலையை காட்டிய எடப்பாடி
ஆனால் சசிகலா சிறைக்கு சென்று முழுவதுமாக 6 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் எடப்பாடியும் அவரது தலைமையிலான அமைச்சர்களும் தங்களின் வேலையை காட்டிவிட்டனர். தற்போது எடப்பாடிக்கு துதிபாடும் பல அமைச்சர்களும் ஓபிஎஸை நம்பிக்கை துரோகி என வசைபாடியவர்கள்தான்.
அப்ப நம்பிக்கை துரோகம் செய்தது யார்?
சசிகலாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தது யார்? ஓ.பன்னீர்செல்வமா எடப்பாடி பழனிச்சாமியா? ஆனால் ஒன்று மட்டும் உண்மை.. இவர்கள் எல்லோருமே சேர்ந்து தமிழக மக்களுக்கும், ஜெயலலிதாவுக்கும் மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள்!