குரங்கணி காட்டுத்தீக்கு யார் காரணம்?... அரசு செய்யத் தவறியது என்ன?
Recommended Video
தேனி: மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு யார் காரணம். இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்தாமல் இருந்தது யாருடைய தவறு, அரசு இந்த விஷயத்தில் செய்யத் தவறியது என்ன?
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் வெப்ப மண்டல மலைக்காடுகள், எனவே இங்கு இயற்கையான காட்டுத்தீக்கு வழியில்லை. மூங்கில் காடுகள், பைன் மரங்கள் உள்ளிட்ட சில மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது இயற்கையாக காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்படும் மாற்றங்களால் இந்தப் பகுதிகளிலும் சூழல் மாறி வருகிறது. எப்போதும் இங்கிருக்கும் புல்வெளிகள் ஈரம் படர்ந்து இருக்கும் நிலையில், 2017-18ல் காடுகள் வறண்டு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காட்டுத் தீ
எனினும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஏற்படும் காட்டுத்தீயானது மனிதர்களால் உருவாக்கப்படுவதாகவே சொல்லப்படுகிறது. அப்படி தான் குரங்கணி பகுதியிலும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட தீ விபத்து 9 பேர் உயிரை பலிவாங்கியுள்ளதோடு சுமார் 27 பேருக்கு 48 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அக்கறை செலுத்தவில்லையா அரசு?
காடுகளில் தீ பரவுவதை கண்காணிக்கும் ஃபயர் வாட்சர்களை( தற்காலிக பணியாளர்கள்) அரசு பணியமர்த்துவது வழக்கம். வழக்கமாக கோடை காலங்களில் இந்த தீ கண்காணிப்பாளர்கள் காடுகளில் ஏற்படும் தீயை கண்காணித்து அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த தற்காலிகப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவது இல்லை. மேலும் வனத்துறையில் 50 சதவீத காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
காடுகளை பராமரிப்பது அவசியம்
காடுகளை பராமரிப்பதில் வீண் செலவு தான் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமே இல்லை. ஏனெனில் காடுகள் இல்லை என்றால் பல் உயிர் ஓம்பல் பாதிக்கப்படும், மழை குறையும். காடு தான் இயற்கையின் மிகப்பெரிய சொத்து, அந்த சொத்தை சரியாக பராமரிக்காமல் விடுவதன் விளைவைத் தான் இயற்கை மாற்றங்களாக நாம் பார்த்து வருகிறோம்.
உள்ளூர் வாசியை அழைத்து சென்றிருக்கலாம்
மலையேற்றம் அழைத்து செல்லும் நிறுவனங்கள், சுற்றுலா வருவோருக்கு முறையான பயிற்சி அளிக்காததும் இந்த கொடூர சம்பவத்திற்கு காரணம். சுற்றுலா வருவோருக்கு உணவு, தண்ணீர் கொடுத்து அழைத்து செல்வதை விட மலையேற்றம் செல்லும் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தவில்லை. இதே போன்று உள்ளூர்வாசி ஒருவரையும் மலையேற்றத்தின் போது அழைத்து சென்றிருந்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.